46
தகுந்தபடி எழுத விரும்பாதவர்கள் – சிரம வாழ்க்கையை தெரிந்தே கைக்கொள்ளுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
நாற்பது முப்பது வருடங்களுக்கு முன்பு சொல்லப்பட்டது – தமிழ் நாட்டில் எழுத்தை நம்பி வாழ முடியாது; எழுத்து அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்குப் போதுமான அளவு பணவசதி கூட பெற்றுத் தராது என்று.
எழுத்தில் சாதனை புரிந்தவர்கள் என்று பெயர் பெற்ற பெரிய எழுத்தாளர்களின் வாழ்க்கை கூட வறுமை நிலைப் பட்டதாகவே இருந்தது. சாதாரண எழுத்தாளர்களின் நிலைமை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
அன்று பத்திரிகைகள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தது இல்லை. பெரிய பத்திரிகைகள் கூட தாராளமான ‘சன்மானம்’ எழுத்தாளர்களுக்குக் கொடுத்ததில்லை. பெரும்பாலான பத்திரிகைகள் எழுத்தாளர்களுக்கு எவ்விதமான ‘அன்பளிப்பு’ம் தந்தது கிடையாது.
தற்காலத்தில் பத்திரிகைகள் அதிகம். அவை தாராளமாகவே ‘அன்பளிப்பு’ வழங்குகின்றன.
ஒரு சிறு கதைக்கு ரூ. 150 – ரூ. 100 என்றெல்லாம் கொடுக்கப்படுகிறது. இளைய எழுத்தாளரின் கதைக்குக் கூட ரூ. 80-குறைந்த பட்சம் ரூ. 60 – வாரப் பத்திரிகைகளால் தரப்படுகிறது.
‘மாத நாவல்’ என்று வெளியிடுகிற மாதப் பிரசுரங்களில் சில ஒரு நாவலுக்கு இரண்டாயிரம் ரூபாய் தருகின்றன. மற்றவை ஆயிரம் ரூபாய் கொடுக்கின்றன.