௧௩௮
ஒப்பியன் மொழிநூல்
“இரண்டுமுத லொன்பா னிறுதி முன்னர்
வழங்கியன் மாவென் கிளவி தோன்றின்
மகர வளவொடு நிகரலு முரித்தே”
என்று தொல்காப்பியக் குற்றியலுகரப் புணரியல் நூற்பாவில் மா என்னும் அளவு கூறப்பட்டிருப்பதால், கீழ்வாயிலக்கத் தைச் சேர்ந்த ஏனையளவுகளும் தொல்காப்பியர் காலத்தில் வழங்கின வென்றே கொள்ளப்படும்.
நீட்டலளவை வாய்பாடு
8 | அணு | = | 1 தேர்த்துகள் |
8 | தேர்த்துகள் | = | 1 பஞ்சிழை |
8 | பஞ்சிழை | = | 1 மயிர் |
8 | மயிர் | = | 1 நுண்மணல் |
8 | நுண்மணல் | = | 1 கடுகு |
8 | கடுகு | = | 1 நெல் |
8 | நெல் | = | 1 பெருவிரல் |
12 | பெருவிரல் | = | 1 சாண் |
2 | சாண் | = | 1 முழம் |
4 | முழம் | = | 1 கோல் அல்லது பாகம் |
500 | கோல் | = | 1 கூப்பீடு |
4 | கூப்பீடு | = | 1 காதம் |
சிலப்பதிகாரத்தில், பஃறுளியாற்றிற்கும் குமரியாற்றுக்கு மிடையிலிருந்த சேய்மை எழுநூற்றுக் காவதம் என்று அடி யார்க்கு நல்லார் கூறியது, இவ் வளவு பற்றியதாயின், அது ஏறத்தாழ 1600 மைல்களாகும். பஃறுளியாற்றுக்குத் தெற்கும் குமரியாற்றுக்கு வடக்கும் இருந்த நிலத்தையுஞ் சேர்த்துக் கணிப்பின், அழிந்துபோன தமிழ்நாடு எவ்வகையினும் 2000 மைலுக்குக் குறையா தென்னலாம். அங்ஙனமாயின், இற்றை யிந்தியா அளவு ஒரு பெருநிலம் தென்கடலில் மூழ்கியதாகும்.
“சோழ இராச்சியம் முழுமையும், முதல் இராசராச சோழனது ஆட்சிக்காலத்தில் ஒருமுறையும், முதல் குலோத் துங்க சோழனது ஆட்சிக்காலத்தில் ஒருமுறையும், மூன்றாம் குலோத்துங்க சோழனது ஆட்சிக்காலத்தில் ஒருமுறையும் அளக்கப்பட்டது. இவை முறையே, கி.பி. 1001, கி.பி. 1086, கி.பி. 1216ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்தவைகளாகும்.