பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அழிந்துபோன தமிழ்நூல்கள்

௧௫௭

அம்பு என்பது தமிழ்ச்சொல்லன்றாயின், அம்போதரங்கம் என்னும் தமிழ்ச்செய்யுளுறுப்புப் பெயரின் பகுதியாயமைந் திருக்காது. அம்பு என்னும் தமிழ்ச்சொல்லே, வடமொழியில் அப்பு என்று வலிக்கும், உம்பர் என்பது உப்பர் என்று இந்தியில் வலித்தல்போல தமிழிலும் இங்ஙனம் வலித்தல் உளது. கா : கம்பு-கப்பு, கொம்பு-கொப்பு.

ஆழ்ந்திருப்பது ஆழி, வாரி என்னும் நீர்ப்பெயர் கடலைக் குறிப்பதுபோல, அம்பு என்னும் நீர்ப்பெயரும் கடலைக் குறிக்கும். கடல் நிலத்தைச்சூழ வட்டமாயிருப்பதால், அதன் பெயர்கள் வட்டப்பொருள் பெற்றன.

அம்பு என்னும் பெயர் வட்டப்பொருள் பெற்றபின், வட்டமான பிற பொருள்களையுங் குறிக்க நேர்ந்தது. அம்பு - வளையல், அம்பி --- ஆம்பி - காளான், L: amb, ambi, Gr. ambhi round.

மலேயத் தீவுக்கூட்டத்தைச் சேர்த்த கே (Ke)த் தீவிலுள்ள மிலேச்சர் செய்யும் படகு வேலைப்பாட்டை, மேனாட்டார் கலவினைப் போன்றே மிகச் சிறந்ததாக மெச்சுகிறார் ரசல் உவாலேஸ்.[1] உலகத்திலேயே முதன் முதலாகப் பெருங்கலஞ் செய்தவராகத் தெரிகின்ற தமிழரின் தற்காலக் கைத்தொழில் நிலையோ, மிகமிக இரங்கத் தக்கதாயிருக்கின்றது.

“உழவு தொழிலே வரைவு வாணிபம்
வித்தை சிற்பமென் றித்திறத் தறுதொழில்
கற்கும் நடையது கரும பூமி"

என்று பிங்கலத்திற் சிறப்பிக்கப்பட்டது பண்டைத் திராவிட இந்தியாவே.

அழிந்துபோன தமிழ் நூல்கள்

ஏனைய மொழிகளிலெல்லாம் இலக்கியம் வரவர உயர்ந்தும் மிகுந்தும் வரவும், தமிழிலோ வரவரத் தாழ்ந்தும் குறைத்தும் வந்திருக்கின்றது. வடமொழி தென்மொழி யிலக்கியங்கள் இரு பெருங்கடல்களாகத் தொள்லூல்களிற் கூறப்படு கின்றன. அவற்றுள், வடமொழிக்கடல் முன்னுள்ளபடியே இன்றும் குறையாதுளது. ஆனால், தென்மொழிக்கடலோ ஒரு சிறு குளமாக வற்றியுள்ளது.


  1. The Malay Archipelago, pp. 321-2.