பக்கம்:கண் திறக்குமா.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

கண் திறக்குமா?


"சர்க்கார் அறிக்கை விட்டிருக்கிறார்கள்!"

'என்னவாம்!"

"ஊரெல்லாம் என்னவோ பிரமாதப்படுகிறதே, சர்க்கார் என்ன சொல்கிறார்கள். தெரியுமா? பொதுஜன நன்மைக்காகச் சட்டத்தையும் அமைதியையும் காப்பது தங்கள் கடமையென்றுக் கருதி, முதலில் நம்மைக் கலைந்து போகும்படி அவர்கள் கேட்டுக்கொண்டார்களாம். கலைய மறுக்கவே, துரதிர்ஷ்டவசமாய் லேசாகத் தடியடிப் பிரயோகம் செய்து கலைக்க நேர்ந்துவிட்டதாம்; அதற்காக அவர்கள் மிகமிக வருந்துகிறார்களாம்!"

"அட, பாவிகளா! லேசாகத் தடியடிப் பிரயோகம் செய்ததின் பலன்தானா, நீ நிற்க முடியாமல் தவிப்பதும், நான் எழுந்திருக்க முடியாமல் விழிப்பதும்?”

"நாமாவது தேவலையே! சம்பவம் நடந்து இன்றுடன் மூன்று நாட்களாகிவிட்டன - இன்னும் எத்தனையோ பேர் இந்த உலகத்தை எட்டிக்கூடப் பார்க்காமல் இருக்கின்றனர். மற்றும் சிலர், இந்த உலகமே வேண்டாம், என்று மறு உலகத்திற்குப் போய்விட்டனர். தப்பித் தவறி, இதுவரை உயிருடன் இருப்பவர்களுக்கும் மொத்தம் எத்தனை இடங்களில் எலும்புகள் முறிந்திருக்கின்றனவாம், தெரியுமா? ஐம்பது இடங்களில், அறுபது இடங்களில்!"

"இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்!”

"நான் சொல்லவில்லை; டாக்டர்களின் "ரிப்போர்ட்” சொல்கிறது.!”

"ம்... இதற்குத்தான் சர்க்கார் பாஷையில் ‘லேசான தடியடிப் பிரயோகம்’ என்று பெயர்போலும்!”

“ஆமாம், எப்படியிருக்கிறது கதை?" 'ரொம்ப நன்றாய்த்தான் இருக்கிறது; நீ போய்ப் படுத்துக்கொள்!" என்று சொல்லிவிட்டு, நான் கால்களை நீட்டிப் படுத்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/31&oldid=1379138" இலிருந்து மீள்விக்கப்பட்டது