வயிறும் வாழ்வும்
அப்போது ‘கல்கி’ காரியாலயத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த காலம். பணி என்றால் அன்புப் பணி அல்ல; பணத்துக்காக ஆற்றிக் கொண்டிருந்த பணிதான்!
ஒரு நாள் நண்பர் ஒருவர், “ஸார், உங்களை ஒருவர் தூக்கி யடித்துவிட்டார்” என்று உற்சாகத்துடன் சொல்லிக் கொண்டே என் அறைக்குள் நுழைந்தார்.
அதைக் கேட்டதும் திடுக்கிட்டு என்னை நானே தொட்டுப் பார்த்துக்கொண்டேன். “உங்களை என்றால் உங்களை அல்ல; உங்கள் கதைகளை!” என்றார் நண்பர்.
“ஐயோ பாவம். என்னுடைய கதைகள் அவரை என்ன செய்தனவோ?”
‘'வேறொன்றும் செய்யவில்லை; உங்களைப் போலவே அவரையும் எழுத வைத்துவிட்டன!”
‘ரொம்ப சந்தோஷம். அதை விடப் பெருமை வேறென்ன வேண்டும், ஓர் எழுத்தாளனுக்கு?”
“பெருமையாவது! ஆசிரியர் கல்கி அவர்கள் பார்த்தால் நீங்கள்தான் வேறொரு புனைபெயரில் அந்தக் கதையை எழுதுகிறீர்களாக்கும் என்று எண்ணி உங்களைக் கட்டாயம் வீட்டுக்கு அனுப்பிவிடுவார், ஜாக்கிரதை!” என்று நண்பர் எச்சரித்தார்.
இந்தச் சம்பவத்துக்குப் பின் ஒரு நாள் அமரர் கல்கி அவர்கள் என்னைத் தம் வீட்டுக்கு வருமாறு பணித்தார்கள்; சென்றேன். கையில் திறந்த பத்திரிகையொன்றை வைத்துக்கொண்டு ஏதோ யோசித்த வண்ணம் அப்படியும்