பக்கம்:கனிச்சாறு 2.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  109


68  அயல் நாட்டில் வாழ்கின்ற தமிழர்க்கு....!


தமிழினத்தீர்! உலகெங்கும் சிதர்ந்தோடி னாலும்
தம்நிலத்தை, தம் இனத்தை மறவாமல் என்றும்
அமிழாது வாழ்கின்ற தாய்க்குலத்தீர்! நீங்கள்
அயல் நாட்டில் - அயலினத்தில் - அயல்மொழிகட் கிடையில்
சிமிழாது நிலைநின்று, தமிழ்மொழியைப் பேணிச்
சிறப்புறவே காத்துவரும் பெருமையினை நோக்கின்
கமழாத உளத்திலெல்லாம் கற்பூரம் நாறும்!
களிப்பிலா நெஞ்சிலெல்லாம் மயிலாடிக் கொஞ்சும்! 1

கடலோடி னாலுமன்னைத் தமிழ் ஓடா நெஞ்சும்,
காசு பணம் சேர்த்தாலும் பழிசேர்க்கா வாழ்வும்,
உடலாடிச் சாய்ந்தாலும் சாயாநற் பண்பும்,
உயிராடிக் குலைந்தாலும் நிலைகுலையா உரனும்,
குடலோடும் நீருக்கும் சோற்றுக்கும் என்றே
குரலோட்டம் மாறாத மாண்பும் உடை யீர் - என்
மடலோடும் உணர்வோடும் பாட்டோடும் உங்கள்
மனத்தோடும் உள்ளுணர்வில் குளித்தாடு கின்றேன்! 2

அயல்நாட்டில் வாழ்கின்ற தமிழினத்தீர்! உங்கள்
அடிபணிந்து வேண்டுகின்றேன்; என்றும், எக் காலும்
கயல் நாட்டை பாண்டியனின் கன்னித்தமிழ் நாட்டை,
கழனிமிகும் சோழனது புலியுலவும் நாட்டை,
புயல் நாட்டை - கருமுகில்கள் மலைசூழ்ந்து நிற்கப்
புனக்குறவன் வில்லெடுக்கும் சேரனது நாட்டை,
வயல் நாட்டை - தமிழ்நிலத்தை மறவாதீர்! நாமும்
வாழ்ந்துகெட்ட வரலாற்றை நொடியும்மற வாதீர்! 3

செந்தமிழை மறவாதீர்! மறவாதீர்!! உள்ளம்
சிலிர்த்தாடும் தமிழினத்தை மறவாதீர் என்றும்!
நொந்தவுளத் தோடுங்கட் குரைக்கின்றேன் இதனை!
நொடிந்தவினம் தமிழினம்போல் விரியுலகில் இல்லை.
சொந்தமொழி, சொந்த இனம் தமைப்பார்த்துத் தமிழன்
சொத்தை மொழி - செத்தவினம் எனப்பேசு கின்றான்!
வந்தமொழி, வந்தவினம் தமக்கடிமை செய்வான்;
வாழையடி வாழையென அடிமைநலங் கண்டான்! 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/145&oldid=1424766" இலிருந்து மீள்விக்கப்பட்டது