பக்கம்:கனிச்சாறு 2.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 163


பழமையும் பேணான்; புதுமையும் காணான்;
பரத்தைவாய் உரத்துடன் தரத்தையும் மிகுப்பான்!
வழமையீ தென்பான்; வாழ்விதென் றுரைப்பான்;
வானத்து மீனுக்கு வடிவெலாம் புனைவான்!
கிழமையும் புரவான்; கிளைமையும் தழுவான்;
கீழ்மை யென்பதே குணமெனக் கிளத்துவான்!
உழல்மெய் உறுப்பெலாம் அடிமையோன் இவனை
உலவ ஏன் விட்டனை ஒண்டமிழ்த் தாயே!

-1979


103

எந்தத் தலைமுறை எழுந்து நிற்பானோ?


இந்தத் தமிழன் ஏமாளித் தமிழன்;
இன்னுஞ் சொன்னால் கோமாளித் தமிழன்!
சொந்த இனத்தையும் மதியான்; இவனொரு
மந்தத் தன்மையன்; மழுங்கல் மதியன்;
மானமும் நாணமும் அழுகிக் கிடப்பவன்;
எந்தத் தலைமுறை எழுந்துநிற் பானோ?
எவன்வந்து சொல்லி இவனைமீட் பானோ?

இந்தத் தமிழன் இளித்தவாய்த் தமிழன்;
இன்னுஞ் சொன்னால் புளித்தவாய்த் தமிழன்!
சந்துக்குச் சந்து தன் கொள்கை மாறுவான்!
சடுதியில் ஒப்பியே பின்னதை மீறுவான்!
குந்தித் தின்னும் வாய்ப்புக் கிடைத்தால்
குடும்பம் முழுதுமே அடிமையாய் விற்பான்!
எந்தத் தலைமுறை எழுந்துநிற் பானோ?
எவன்வந்து சொல்லி இவனைமீட் பானோ?

-1979
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/199&oldid=1437571" இலிருந்து மீள்விக்கப்பட்டது