46 ☐ கனிச்சாறு - இரண்டாம் தொகுதி
29 கண்ணீர் வரி!
முந்தையொரு பழம்பொழுதில்
முகிழ்த்தலர்ந்து விரிந்துயர்ந்த
அந்தமிழை உட்பொதிந்துன் ஆவியெனக் காத்தனையே;
அந்தமிழை உட்பொதிந்துன் ஆவியெனக் காத்ததெலாம்,
இந்தியெனும் புலைமொழிக்கே
ஏவல்செயும் இழிதகைக்கோ?
1
திக்கெட்டும் மணங்கமழ்ந்து
தெளியார்க்கிங் கொளியேற்றும்
முக்கழகச் சீர்சுமந்த முது நூற்கள் யாத்தனையே!
முக்கழகச் சீர்சுமந்த முது நூற்கள் யாத்ததெலாம்,
புக்கவரும் இந்தியெனும் புன்மொழிக்குக் காவிடவோ?
2
'எமையாவன் அறம்பழித்தான்' என்றவரை வென்றுவர
இமையாவெண் பனிமலைக்கல் இவர்ந்துபுலி நாட்டினையே;
இமையாவெண் பனிமலைக்கல் இவர்ந்து புலி நாட்டியது,
நமையழிக்கும் வடவர்க்கே நாயடிமை செய்திடவோ?
3
அறம்பிழைத்த மனு நூலை
அழித்தொழித்துத் தவறிழையாத்
திறம்படைத்த திருக்குறளைச் செய்தளித்துப் பேணினையே;
திறம்படைத்த திருக்குறளைச் செய்தளித்துப் பேணியது,
மறம்படைத்த இந்தியெனும் மத்தியின்கைத் தந்திடவோ?
4
இன்மையினார்க் குள்ளிரங்கி, இரவலரைப் பரிந்தேற்றுப்
புன்மையினார் தமையழிக்கப் போர்போரென் றார்த்தனையே;
புன்மையினார் தமையழிக்கப்
போர்போரென் றார்த்ததெலாம்,
வன்மையினால் அரசமைத்த வடவரடி தொழுதிடவோ?
5
திகழ்ந்தொளிர்ந்த செந்தமிழ்த்தாய்த்
திருவடிக்கீழ் அரசமர்ந்து
புகழழிக்கும் புல்லர்முன் புலியெனநீ பொங்கினையே;
புகழழிக்கும் புல்லர்முன் புலியெனநீ பொங்கினதிங்
கிகழ்சேர்க்கும் இந்தியினுக் கிருந்தடிமை புரிந்திடவோ?
6