பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கபோதிபுரக் காதல்

ஜல் ஜல் ஜல! ஜல் ஜல் ஜல ஜல!

“உம்! கொஞ்சம் வேகமா நட. வேகற வெயில் வர்றதுக்குள்ளே ஊர் போவோம்...”

ஜல் ஜல், ஜல ஜல. ஜல் ஜல், ஜலஜல.

“சும்மா போகமாட்டாயே, நீ. உன் வாடிக்கையே அதுதானே, சவுக்கடி கொடுத்தால்தானே போவே உம்...”

“வேண்டாமப்பா, பாவம், வாயில்லாத பிராணி, வெயில் வேளை. போகட்டும் மெதுவா. அடிக்காதே” என்று வேதவல்லி சொன்னாள், மாட்டைச் சவுக்கால் சுரீல் என அடித்து வாலைப்பிடித்து ஒடித்து வண்டியை ஓட்டியவனைப் பார்த்து. மணி காலை பதினொன்று ஆகிறது. ஒரு சாலை ஓரமாக வண்டி போகிறது. வண்டியிலே இரு மாதர், தாயும் மகளும். தலைக்குட்டையும், சந்தனப் பொட்டும், பொடிமட்டையுடன் ஓர் ஆடவர், வேதவல்லியின் புருஷர், வீராசாமிபிள்ளை, ஆக மூவரும் செல்லுகின்றனர். வண்டிமாடு செவிலி நிறம் ஓட்டுகிற ஆளும் சிவப்பு. மீசை கருக்குவிட்டுக்கொண்டிருக்கிற பருவம். “என்னமோம்மா, நீங்க பாவ புண்ணியத்தைப் பாக்கறீங்க மாட்டை அடிச்சு ஓட்டாதேன்னு சொல்றீங்க. சில பேரே பார்க்கணுமே, என்னடா, மாடு நகருது, அடிச்சு ஓட்டேன். கொடுக்கிறது காசா, மண்ணா என்று கோபிப்பார்கள்” என்றான் வண்டிக்காரன்.

“செலபேரு அப்படித்தான். ஓட்டமும் நடையுமா போனாகூட, பன்னிரெண்டு மணிக்குள்ளே போயிடலாமே