பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

கபோதிபுரக்


அண்ணனும் தங்கையுமாகச் சிரிக்கும் நேரத்திலே, சாரதா, அங்கு வந்தாள். ‘சிரிக்கும் காரணம் என்னவோ?’ என்று கேட்டாள்.

“நாங்களா சிரிப்பதா! ஏன் அண்ணா நாம் எதற்காகச் சிரித்தோம்” – என்று கோகிலம் கேட்டாள். அவள் கேட்ட கேள்வியும், பேசியவிதமும், சாரதாவுக்கும் சிரிப்பை உண்டாக்கிவிட்டது.

மூவருமாக, விழுந்து விழுந்து சிரித்தனர்! “பேதைப்பெண்ணே சிக்கினாயா” என்று சிங்காரவேலன் எண்ணினான்!!

“குட்டி மகாகெட்டிக்காரியாக இருக்கிறாள். எங்கே நமது கண்களுக்கு விஷயம் தெரிந்துவிடுகிறதோவென்று மிக ஜாக்கிரதையாக நடந்துகொள்கிறாள். அவனாவது பரவாயில்லையென்று எண்ணிக்கொண்டு சில சமயங்களில் அவளை நோக்கி சிரிக்கிறான். கொஞ்சுகிறான். இருவரும் கைப்பிடியாகக் கிடைக்கவேண்டும். அது போட்டோ எடுக்கப்படவேண்டும். அதுதான் என் பிளான். சமயம் வாய்க்கவில்லையே” என்றான் சிங்காரவேலன், கோகிலத்திடம்.

“அண்ணா பெண்கள் எப்போதும் நிறைகுடம் போன்றவர்கள். உணர்ச்சியைத் ததும்பவிடமாட்டார்கள் ஆண்கள் அப்படியல்லவே. நிழலசைந்தாலும், அவள் அசைந்தாள் என்று எண்ணிக்கொண்டு அவதிப்படுவார்கள். இது இயற்கைதானே” என்றான் கோகிலம்.

“அது எப்படியாவது தொலையட்டும். நமக்கு வேண்டியது நடக்க வேண்டுமே” என்றான் வேலன்.