பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

61


இந்த மக்கள்தான் எவ்வளவு நம்புகிறார்கள். எத்தனை பயம், இதைவிட சாரதாவின் பயத்தை நான் கண்டு ஆச்சரியப்பட்டேன்” – என்றான் யோகி.

“அதுவுஞ்சரிதான்” என்றாள் கோகிலம்.

“ஆகவே நீ என்னை அணைத்திட வாடி,
அணைத்திட வாடி - ஆனந்தத் தோடி பாடி”

என்று யோகி ஜாவளி பாடினான், சரசமாடினான், ஜடையைப் பிடித்திழுத்தான். அவள் இவன் ருத்திராட்ச மாலையைப் பிடித்திழுத்தாள். பொட்டைக் கலைத்தான் இவன். அவள் திருநீறைத் துடைத்தழித்தாள். கிள்ளினான்! கிள்ளினாள். நெருக்கினான்! நில் என்றாள். சிரித்தான்! சீறுவதுபோல் நடித்தாள். எழுந்தான்! அவள் படுத்தாள்.

எட்டி உதைத்தான் கதவைப் பரந்தாமன், ஆத்திரம் தாளமாட்டாது!! மட்டி! மடையா! எனத் திட்டினான். மாது கோகிலம் மருண்டாள். “மானத்தைப் பறித்திடுவேன், உன் சூது மார்க்கத்தை அழித்திடுவேன், ஊரை இதோ எழுப்பிடுவேன், உன் சேதி உரைத்திடுவேன்” என்று கோபத்துடன் கூறினான் பரந்தாமன்.

““பரந்தாமா! பொறு! பொறு! பதறாதே! ஏதோ நடந்தது நடந்துவிட்டது. இவள் என் சொந்த மனைவி கோகிலம், கூறடி உள்ளதை, நான் குடும்பம் நடத்த முடியாது திகைத்தேன். பாடுபட முயன்றேன். உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே இவ்வேடம் பூண்டேன். என் மானத்தைக் காப்பாற்று. உன் காலடி விழுவேன்” என்று கருணானந்தன் அழுதான்.

மடத்துக்கென வரும் காணிக்கையை எண்ணினான், ஐயோ, அது வராவண்ணம் இப்பாவிப் பரந்தாமன் செய்திடுவானே, என் செய்வது என்று பயந்தான்.