பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

கபோதிபுரக்


“பால் ஆறிப்போய் விடுகிறதே!”

“ஆறட்டுமே யாருக்கென்ன?”

“விளையாட இதுதானா சமயம்”

“சரசத்துக்குச் சமயம் வேண்டுமோ”

“சின்ன பிள்ளைபோல விளையாட வேண்டாம்; எனக்கு தூக்கம் வருகிறது. நீங்கள் பால் குடித்துவிட்டால் படுத்துத் தூங்கலாம்”

“தூங்க வேண்டுமா! ஏன் நான் ஆராரோ ஆரிரரோ பாடட்டுமா தொட்டிலிலே படுக்க வைக்கட்டுமா” என்று கூறிக்கொண்டே சாரதாவைத் தூக்க ஆரம்பித்துவிட்டான், கணவன். சாரதாவுக்குத் தன்னையும் அறியாமல் ஒரு சிரிப்பு வந்துவிட்டது.

“ஐயய்யோ! இதேது இவ்வளவு சரசம். என்ன சங்கதி! பால்யம் திரும்பிவிட்டதோ” என்று கேட்டுக்கொண்டே, “இதோ பாருங்கள் இப்படி, என்மீது உமக்கு ஆசைதானே” என்றாள்.

தலையை வேகமாகக் கிழவன் அசைத்தான்.

“சத்தியமாக, ஆசைதானே” என்று கேட்டாள் சாரதா.

“சாமுண்டி சாட்சியாக நிஜம்” என்றான் கிழவன்.

“அப்படியானால் நான் சொல்வதைக் கேட்க வேண்டும். பாலைக் குடித்துவிட்டுப் பிறகு பேசுங்கள்” என்றாள் சாரதா.

“ஹுஹும் நான் மாட்டேன். நீ கொஞ்சமாவது குடிக்க வேண்டும்” என்றான் கிழவன். சொல்லிக்கொண்டே பால் செம்பை, சாரதாவின் வாயில் வைத்து அழுத்திக்கொண்டே விளையாடினான். கொஞ்சம் பால் உள்ளேயும் கொஞ்சம் அவள் மேலாடையிலும் விழுந்தது.