vii
யானைகளைப் பிடித்துத் தன் அகன்ற வாயிலே மென்று தின்று கொண்டிருந்தான். அப்பொழுதும் அடங்காத பசியுடையவன். இந்திரனது ஐராவதம் என்னும் யானையின் நெற்றிப் பட்டத்தைத் தன் நெற்றிப்பட்டமாகவும், அதன் கொம்புகளில் அலங்கரிக்கப்பட்ட பூண்களைத் தனது தோள் வளைகளாகவும் கொண்டு விளங்கினான்.
அவ்வரக்கன் தான் கொன்ற புலிகளின் தோலை ஆடையாக உடுத்தியிருந்தான். யானைத் தோல்களைச் சல்லடமாக அணிந்திருந்தான். திசை யானைகளுக்குக் கட்டப்பட்டிருந்த மணிகளை எல்லாம் ஒரு மலைப்பாம்பிலே கோத்து அதனைத் தனது ஆடைக்கு அலங்காரமாகக் கட்டியிருந்தான்.
பூதங்கள் ஐந்தும் ஓர் உருக்கொண்டு வருவதே போலும் உருவத்தன் இடி போன்ற குரல் உடையவன். இருபத்தையாயிரம் யானைகளின் பலம் கொண்டவன்.
இத்தகைய விராதன் சீதா பிராட்டியைத் தூக்கிக்கொண்டு ஆகாயத்தில் எழும்பினான். இராம லட்சுமணர் இருவரும் அவனது தோள் மீது ஏறி இரு தோள்களையும் வெட்டி வீழ்த்தினர்.
உடனே விராதன் தன் சுய உருப்பெற்று இராமப்பிரானைப் பலவாறு துதித்தான்.
“அவனை ‘நீ யார்’ என்று வினவ அவன் சொன்ன பதில் வருமாறு:
“நான் ஒரு கந்தர்வன். தும்புரு எனும் பெயருடையவன். குபேரன் ஆட்சிக்குட்பட்ட தேவர் உலகில் உள்ளவன். அரம்மை எனும் தேவமாது ஆடல் புரியக்கண்டு அவள் மீது காதல் கொண்டேன்; சீற்றம் கொண்ட குபேரன் என்னை அரக்கனாகச் சபித்தான்.