பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222


இராமன்-இராமபிரான்; இன்னது ஆய கருங் கடலை எய்தி - இத்தகையதான கரிய கடலை அடைந்து; இதனுக்கு ஏழு மடங்கு - இந்தக் கடலைக் காட்டிலும் ஏழு மடங்காக; தன்னது ஆய - தன்னிடமுள்ள; நெடு மானம் துயரம் காதல் இவை தழைப்ப - மிக்க மானமும் துன்பமும் ஆசையுமாகிய இவைகள் மிக; மேல் விளைவு என்னது ஆகும் என்று - இனி நிகழக்கூடிய செயல் யாதாகும் என; இருந்தான் - ஆராய்ந்து கொண்டு இருந்தான் (இது நிற்க); இகல் இலங்கை - பகையால் மாறுபட்ட இலங்கையில்; பின்னது ஆய காரியமும் நிகழ்ந்த பொருளும் பேசுவாம் - (அநுமன் எரியூட்டிச் சென்ற) பின்னர் நடைபெற்ற காரியத்தையும் நிகழ்ந்த செயலையும் (இனிச்) சொல்வோம்.

***

இலங்கை அநுமனால் எரியுண்ட பின், தெய்வத்தச்சனை அந்நகரை மீண்டும் அமைக்கும்படி ஆணையிட்டான் இராவணன். புதிதாக அமைக்கப்பட்ட அந்நகர் முன்னைக் காட்டிலும் அழகுடன் விளங்கியது. இது கண்ட இலங்கேசன் பெருமகிழ்ச்சியடைந்தான். தெய்வத் தச்சனுக்கும் பிரம்மனுக்கும் சன்மானம் வழங்கினான். புதிதாக அமைக்கப்பட்ட ஆயிரந் தூண் மண்டபத்தில் மந்திராலோசனையும் நடத்தினான் இராவணன். இந்த மந்திராலோசனையில் இடம் பெற்றவர் முனிவர்களோ, மற்ற ஞானவான்களோ அல்லர்: இராவணனுக்கு வேண்டிய அரக்கர்கள், மந்திரி, சேனாதிபதி, தம்பிகள் கும்பகன்னன், வீபீடணன் ஆகியோரே. தன் நாட்டிற்கு ஏற்பட்ட தீங்கை (அநுமன் எரியூட்டியதை) நினைத்து வருந்துகிறான் இலங்கையின் கோன். சேனைத்தலைவன் மகோதரன் ஆகிய மற்றைய அரக்கர் தம் கருத்துக்களைக் கூறுகின்றனர்.

கும்பகன்னன் இராவணனை அவன் சீதையைக் கவர்ந்தது முதல் தவறு; மாற்றான் மனைவியை காமுறுவது பெருந் தவறு; என்று இடித்துக் கூறுகிறான்.

***