15
இராமனும் சுக்கிரீவனும் நண்பர் ஆகி விட்டபடியால் இனி சுக்கிரீவன் இருக்கையும் இராமபிரானின் இருக்கையும் ஒன்றேயாதலால் அவ்வாறு கூறினான் அநுமன்.
சுக்கிரீவனது இருக்கையை “உங்களது இருக்கை” என்று இராமபிரானைப் பார்த்துக் கூறினான்.
“அப்படியே ஆகட்டும்” என்று இராமன் கூற, எல்லாரும் புறப்பட்டனர். சுக்கிரீவனது இருப்பிடம் சேர்ந்தனர். வானரங்கள் ஏராளமான பழங்களைக்கொண்டு வந்தன. இராமன் நீராடி விட்டு அந்தப் பழங்களை உண்டான். பசியாறினான்.
பிறகு அநுமன் வாலியைப் பற்றி இராமனிடம் கூறினான். சுக்கிரீவன் பால் வாலி சினங்கொண்ட காரணத்தை விளக்கினான். சுக்கிரீவனுடைய மனைவியாகிய உருமையை வாலி கவர்ந்து கொண்டதையும் கூறினான்.
கேட்டான் இராமன், “அந்த வாலியைக் கொல்வேன். அவன் இருக்குமிடத்தைக் காட்டுக” என்றான்.
அப்போது இராமபிரானின் வலிமையை அரிய விரும்பினான் சுக்ரீவன். அவனுடைய வேண்டுகோளை ஏற்று ஒரே அம்பினால் மராமரங்கள் ஏழினையும் துளைத்தான் .
***
நீடு நாகம் ஊடு மேகம் ஓட
நீரும் ஓட நேர்
ஆடும் நாகம் ஓட மானயானை ஓட
ஆளி போம்
மாடு நாகம் நீடு சாரல்
வாளை ஓடும் வாவி யூடு
ஓடு நாகம் ஓட வேங்கை ஓடும்
யூகம் ஓடுமே.