பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31



மும்மை சால் உலகுக்கு எல்லாம்
        மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
        தனிப்பெரும் பதத்தைத் தானே
இம்மையே எழுமை நோய்க்கும்
        மருந்தினை, இராம என்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக்
        கண்களில் தெரியக் கண்டான்.

***

மூன்று உலகங்களுக்கும் மூல மந்திரமாக உள்ளதும், தன்னை ஜபிக்கின்ற அடியார்க்குத் தம்மையே முற்று அளிக்கின்றதும், ஒப்பற்ற சிறந்த சொல்லாக உள்ளதும் இப்பிறப்பிலேயே எழுமையும் ஒழிக்க வல்லதும்; ஆன ‘ராம’ என்ற சிறந்த திருநாமம் அந்த அம்பிலே விளங்கக் கண்டான் வாலி.

***

மும்மை சால் – மேல் உலகம்; பூ உலகம்; பாதாள உலகம் என்று சொல்லப்பட்ட மூன்று வகையான: உலகுக்கு எல்லாம் – உலகங்களுக்கு எல்லாம்; மூல மந்திரத்தை – முக்கிய மந்திரமாக உள்ளதும்; தமர்க்கு – தன்னை ஜபிக்கின்ற அடியார்க்கு; தம்மையே முற்றும் நல்கும் – தம்மையே முற்றும் கொடுக்கின்ற; தனிப்பெரும் பதத்தை – ஒப்பற்ற சிறந்த சொல்லாக உள்ளதும்; தானே – தனியாகவே; இம்மையே – இப் பிறப்பிலேயே; எழுமை நோய்க்கும் – எழுவகைப் பிறப்புகளாகிய நோய்களை; மருந்தினை – ஒழிக்க வல்ல மருந்தாக உள்ளதும் ஆன; இராம என்னும் செம்மை சேர் நாமம் தன்னை – ராம என்கிற சிறந்த திருநாமத்தை; கண்களில் தெரியக் கண்டான் – தனது கண்களினால் (அந்த அம்பிலே) விளங்கப் பார்த்தான்.

***