பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74



எதற்காகச் சென்றார்? ஆருயிர் காக்க. யாருடைய ஆருயிர் காக்க? சீதையின் ஆருயிர் காக்க.

சென்று யாரைக் கண்டார்? அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டார். அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு யார்? சீதை. அதாவது பூமிதேவியின் பெண். சீதையைக் கண்டார். ஐம்பெரும் பூதங்களிலே ஒன்று நிலம் அல்லவா? அந்த நில மடந்தையின் மகளைக் கண்டார். கண்டபின் என்ன கொண்டார்? சீற்றம் கொண்டார். யார் மீது? இராவணன்மீது.

சீற்றம் கொண்டவர் என்ன செய்தார்? இலங்கைக்குத் தீவைத்தார்.

அத்தகைய ஆஞ்சநேயர் நம்மைப் எல்லாம் காப்பார் என்று காப்புச் செய்யுள் பாடித் துதிக்கிறார் கம்பர்.

***

அஞ்சிலே ஒன்று - பஞ்ச பூதங்களிலே ஒன்று; அதாவது வாயு. பெற்றான் - பெற்றவனாகிய அநுமன்.

அஞ்சிலே ஒன்றைத் தாவி - பஞ்ச பூதங்களிலே ஒன்றாகிய கடல் நீரைத் தாவி.

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக - ஐம்பெரும் பூதங்களிலே ஒன்று வழியாக - அதாவது வான் வழியாக, ஆருயிர் காக்க - சீதையின் ஆருயிரைக் காத்தல் பொருட்டு; ஏகி - சென்று.

அசோக வனத்திலே சீதாபிராட்டியைக் கண்டபோது சிறையிலிருந்த செல்வி எப்படி இருந்தாள்? தன் உயிர்விடும் நிலையில் இருந்தாள். ‘ராம ராம’ என்று ராம நாமத்தைக் கூறி சீதாபிராட்டியைக் காக்கிறான் அநுமன். நிலமடந்தை யின் மகளாகிய சீதையைக் கண்டு!

அயலார் ஊரில் - அயலாராகிய அரக்காதம் ஊரிலே; அதாவது இன்றைய இலங்கையிலே; அஞ்சிலே ஒன்று வைத்தான் - ஐம்பெரும் பூதங்களிலே ஒன்றாகிய தீ வைத்தவன் (அதாவது அநுமன்), நம்மை அளித்துக் காப்பான்.

***