20
எனக்குத் தோன்றுகிறது. இவ்வளவு காலம் பாதுகாத்த திருவருள் இனியும் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நீ கவலைப்படாமல் இரு.”
இரும்பிடர்த்தலையார் புறப்பட்டுவிட்டார். காவிரிப்பூம் பட்டினத்திற்கா? இல்லை, இல்லை. அங்கே அவருக்கு என்ன வேலை? இளவரசனை இழந்து விட்டேன் என்று சான்றோர்களிடம் சொல்லப்போவதானால் போகலாம்!
என்ன செய்வது, எங்கே போவது என்ற திட்டமே இல்லாமல் அவர் புறப்பட்டார். கால் போன வழியே நடந்தார். தம் தங்கைக்கு முன் தம் துயரத்தை வெளியிடவில்லை. இப்போது அவர் உள்ளத்துக்குள்ளே புதைந்திருந்த துயரம் வந்து கப்பிக்கொண்டது. கால் தள்ளாடியது. கண்ணில் நீர்த்துளிகள் தோன்றிப் பார்வையை மறைத்தன. தலை கிறுகிறுத்தது.
★
எதிர்பாராத வகையில் சிக்கிக்கொண்டான் இளவரசன். யாரும் இல்லாத காலத்தில் இரண்டு முரடர்கள் அவனை மறித்துப் பிடித்துக்கொண்டார்கள். ஆட்டுக் குட்டியைப் போல் தூக்கிக் கொண்டு ஓடினார்கள். இளவரசன், “ஐயோ!” என்று கத்தவில்லை. அந்த வார்த்தை அவன் குலத்தினர் வாயில் வராதது. தன்னால் ஆனவரையில் முரணிப் பார்த்தான். முரடர்களின் பலத்துக்கு முன் அவன் பலம் எம்மாத்திரம்?
பகைவர்கள் ஒற்றர்களை ஏவி அரசி இருக்கும் இடத்தைத் தெரிந்து கொண்டார்கள். பிறகு அவளுக்குக் குழந்தை பிறந்து வளர்ந்து வருவதையும்