பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆப்கானிஸ்தானம்

378

ஆப்கானிஸ்தானம்

கவே இருந்துவருகிறது. பார்க்க: ஆப்கானிஸ்தானம், இந்தியா வரலாறு, வடஇந்தியா (1800-1950).

ஆப்கானிஸ்தானம் மேற்குப் பாகிஸ்தானிற்கும் பாரசீகத்திற்கும் இடையேயுள்ள இந்தியாவின்மேல் மேற்கேயிருந்து படையெடுத்தவர்களில் பெரும்பாலோர் இந்நாட்டைக் கடந்தே வந்தவர்கள்.

ஆப்கானிஸ்தானம்

இந்துகுஷ் மலைத்தொடரின் பெரும்பகுதி இந்நாட்டிலேயே இருக்கிறது. சில சிகரங்கள் 20,000 அடி உயரத்திற்கு மேலும் உள்ளன: இங்கு நிலக்கரி, இரும்பு முதலிய தாதுப்பொருள்கள் கிடைக்கின்றன. இந்நாட்டிலே சில சமயங்களில் மிகக் கடுமையான வெப்பமும் சில சமயங்களில் தாங்க முடியாத குளிருமாக இருக்கும். காபுலிலும் கஜனியிலும் 100° பா. வுக்கு மேல் வெப்பநிலை உயர்வதில்லை; பிப்ரவரியில் -10° பா. அல்லது -15° பா. வரையில் குறைகிறது. இங்குச் சராசரி 11 அங். மழை பெய்கிறது.

இந்நாட்டின் பரப்பு : 2,50,000 ச. மைல். மக் : சு. 120 இலட்சம் (1948). இங்குள்ள மக்கள் ஆப்கானியர் என்று பெயர் பெறுவர். இவர்கள் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள். போக்குவரத்திற்கு இவர்கள் ஒட்டகங்களை உபயோகிக்கின்றனர். முக்கியப் பட்டடணங்களுக்கிடையே பஸ், லாரி போக்குவரத்து நடைபெறுகிறது. இவர்கள் அழகிய கம்பளிகள் நெய்தல், ஆடு மேய்த்தல் முதலிய வேலைகளைச் செய்கின்றனர். விவசாயம் முக்கியமான தொழில்; குறைந்த அளவு கிடைக்கக்கூடிய நீர்ப்பாசன வசதியைக் கொண்டு இவர்கள் சாகுபடியை நடத்தவேண்டியிருக்கிறது. கரும்பும் பருத்தியும் ஓரளவு பயிரிடப்படுகின்றன. இந்நாட்டு வாணிபத்தில் 80% பாகிஸ்தான் வழியாக நடைபெறுகிறது. இந்தியாவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் பருத்தி நெசவுப்பொருள்கள், சர்க்கரை, தோல் சாமான்கள், தேயிலை, காகிதம், சிமென்ட் முதலியன இங்குக் கொண்டுவரப்படுகின்றன. அந்நாடுகளுக்கு வாசனைப் பொருள்கள், பழங்கள், சமக்காளம் முதலி யவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஆப்கானிய மகளிர் பர்தா அணிவர். இம்மக்கள் பேசும் மொழி 'புஷ்டு'. சமீபகாலம் வரையில் பாரசீகம் அரசாங்க மொழியாக இருந்தது. இப்போது புஷ்டுவே அரசாங்கமொழி ஆகியுள்ளது. காபுலில் ஒரு கலைக் கல்லூரியும் ஒரு ராணுவக் கல்லூரியும் உள்ளன. ஆரம்பக் கல்வி கட்டாயமாகவும் இலவசமாகவும் அளிக்கப்படுகிறது. தலைநகரம் : காபுல்: மக்: 2,06.208 (1948), மற்ற முக்கியமான நகரங்கள்: கந்தகார், மக்: 77,186 (1948) ; ஹெராத், மக்: 75,632 (1948).

வரலாறு : இந்நாட்டின் ஆதிவரலாறு தெளிவாக விளங்கவில்லை. கி.மு. 4ஆம் நூற்றாண்டிலேயே இது முழுவதும் மகா அலெக்சாந்தரால் வெல்லப்பட்டது. இந்தியாவின் மீது படை யெடுத்த முகம்மதியர்களும் மொகலாயர்களும் இதைக் கடந்து இந்துகுஷ் மலைக் கணவாய்கள் வழியாக வந்தவர்களேமொகலாய சாம்ராச்சியம் மிகப் பரந்திருந்த காலத்தில் அதன் ஆட்சியில் ஆப்கானிஸ்தானம் அடங்கி யிருந்தது. இந்நாட்டை ஆசியாவின் போர்க்களம் என்று கூறுவதுண்டு. கிரேக்கர்களும், அராபியர்களும், மங்கோலியர்களும், பாரசீகர்களும் ஒவ்வொரு காலத்தில் இதை ஆண்டு வந்துள்ளனர்.

18ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியிலிருந்து இதன் வரலாற்று விவரங்கள் ஓரளவு தெரிய வருகின்றன. இதை ஆண்டுவந்த நாதர்ஷா என்னும் பாரசீக மன்னன் இறந்தபின், அகமத்ஷா என்னும் ஒரு தலைவனை ஆப்கானியர் தெரிந்தெடுத்துக் கொண்டனர். அவன் துரானியர்களின் தலைவன் என்று தன்னைக் கூறிக் கொண்டான். 1761-ல் டெல்லி யருகில் நடந்த பானிபட்டு போரில் அவன் மகாராஷ்டிரர்களுடைய பெரும் படையைத் தோற்கடித்தான். அவன் தனது இராச்சியத்தின் பரப்பை மிகவும் விரிவாக்கிக் கொண்டான். அவனுக்குப் பிறகு 1773-ல் அவன் மகன் தைமூர் அரசாளத் தொடங்கியபின் அவன் இராச்சியத்தில் குழப்பமே மிகுந்திருந்தது. தைமூருக்கு 23 மக்கள். அவர்களில் சாமான் மிர்சா என்பவன் அவனுக்குப்பின் பட்டமெய்தினான். பிறகு, அரசுரிமைக்குப் போட்டியாகத் தொடங்கிய வார்சுரிமைப் போரில் காம்ரான் என்ற மற்றொரு மகன் வென்று பட்ட மெய்தினான். 831-ல் பாரசீகர்கள் ஹெராத்தை முற்றுகையிட்டனர். ரஷ்யர்களும் ஆப்கானிஸ்தானத்தின் மீது குறி வைத்திருப்பரோ என்னும் ஐயம் இந்தியாவிலிருந்த ஆங்கிலேயர்களுக்கு ஏற்பட்டது. ஆங்கிலேயர்களுடைய ஐயப்பாட்டால் 1838-ல் முதல் ஆப்கானிய யுத்தம் மூண்டது. பிரிட்டிஷாரிடம் சரண் புகுந்திருந்த ஷாஷூஜா என்பவனை ஆங்கிலேயர் அரச பதவியில் அமர்த்தினர். 1842-ல் ஆப்கானியர்கள் பிரிட்டிஷாரை நாட்டை விட்டு விரட்டினர். 1849-ல் ஆப்கானியர்களும் சீக்கியர்களும் சேர்ந்து எதிர்த்தும், குஜராத் போரில் ஆங்கிலேயர்களிடம் தோல்வியுற்றனர். ஷாஷூஜாவின் மக்களில் ஷேர்அலிகான் என்பவன் காபுலில் பட்டமெய்தியபின் நாட்டில் குழப்பம் அதிகரித்தது. இந்திய அரசப் பிரதிநிதியாயிருந்த சர்ஜான் லாரன்ஸ் உதவியால் அம்மன்னன் தன் குடிகளோடு புரிந்துவந்த போரில் வெற்றி யடைந்தான். 1870-ல் அவன் மகன் யாகூப்கான் தந்தையை எதிர்த்துக் கலகம் செய்தான். ஆயினும் அவன் தன் முயற்சியில் தோல்வி யடையவே அப்துல்லாகான் வாரிசாக நியமிக்கப்பட்டான். ரஷ்யர்கள் ஆப்கானியர்களோடு நட்புரிமை கொண்டாடுவதாக அறிந்த பிரிட்டிஷ்காரர்கள் இரண்டாம் ஆப்கானிய யுத்தத்தைத் தொடங்கினர். 1878-ல் அரசன் நாட்டை விட்டு ஓடி, அடுத்த ஆண்டில் இறந்தும் போனான். அவனுக்குப்பின் பட்டமெய்திய யாகூப்கான் பிரிட்டிஷாரோடு ஒரு நேச உடன்படிக்கை செய்துகொண்டான். இவ்வொப்பந்தப்படி ஒரு பிரிட்டிஷ் பிரதிநிதி காபுலில் இருப்பதென்றும், ஆப்கானியர்களுக்கு வேண்டியபோது படை உதவி செய்வதென்றும் ஏற்படுத்திக் கொண்டனர்.