பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலம் - 15 சங்க காலம் மிகப் பரந்துபட்டது என்பது முன்பே கூறப்பெற்றது. இதன் முற்பகுதியில் (தொல்காப்பியத்திற்கு முன்பு) வடவர் கூட்டுறவு தமிழகத்தில் இல்லை. எனவே, அக்காலத்திற்குப் பின்பு பாடப்பெற்ற தொல்காப்பியத்திலும் பிற சங்க நூல்களிலுமே வடசொற்கள் தமிழிற் கலந்தன. பெரும்பாலும் சமயத் தொடர்பான சொற்கள் இப்பிறமொழிச் சொற்களாகவே காணப்படுகின்றன. எனவே, பிறமொழிச் சொற்களைச் சிலவாகக் கொண்ட செய்யுட்களும் சங்க நூல்களில் இடம் பெற்றுள்ளன என்பதை இங்கு அறிதல் நலம். வடநாட்டுப் புராணக் கதைகளும், புத்த சாதகக் கதைகளும் சில தொகை நூற்பாக்களிலும், மணிமேகலையிலும், சிவப்பதிகாரத்திலும் இடம் பெற்றுள்ளன. சிலப்பதிகாரமும், மணிமேகலையும் பரந்துபட்ட சங்ககாலத்தின் இறுதியில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் செய்யப்பட்டவை. இந்த உண்மைகளை உளங்கொள்ளின், சங்க காலத்தின் முற்பகுதி தமிழ்மட்டும் வழங்கிய பகுதி என்பதும், பிற்பகுதி தமிழோடு பிறமொழிகளும் கலந்து வழங்கிய பகுதி என்பதும் நன்கு அறியப்படும். இவ்வுண்மையைத் தொல்காப்பியத்திலேயே காணலாம். தொல்காப்பியம் தொல்காப்பியம், இன்றுள்ள சங்க நூல்களுள் காலத்தால் முற்பட்டது என்பது பலர் கருத்து. முற்காலத்திலிருந்த தமிழ்நூல் வகைகளையும் செய்யுள் வகைகளையும் உலக வழக்காகிய நெறிமுறைகளையும் அறிவதற்குச் சிறந்த கருவியாக உள்ளது இந்நூலே என்பது அறிஞர் கருத்து. இந்நூல் எழுத்து சொல், பொருள் என்னும் மூன்றையும் பற்றி எடுத்துக் கூறுவது. இதன்கண் உள்ள விதிகளைக் கூர்ந்து நோக்கின், அவற்றுக்கெல்லாம் அடிப்படையாகத் தொல்காப்பியர்க்கு முன்னரே மிகப்பல இலக்கியங்களும், இலக்கணநூல்களும் தமிழ்மொழியில் நிலைபெற்று இருத்தல் வேண்டும் என்பது அறிவுடையோருக்கு நன்கு புலனாகும். தொல்காப்பியர் தம் காலத்தனவும் தமக்கு முன்னர் எழுந்தனவும் ஆகிய இலக்கண இலக்கிய நூல்களை நன்கு ஆராய்ந்தே அவற்றின் இயல்புகள் அனைத்தும் விளங்கத் தம் நூலை இயற்றினார் என்பது தெளிவாகும். தொல்காப்பியச் சூத்திரங்களுள் ஏறத்தாழ இரு நூற்று அறுபது இடங்களில் தொல்காப்பியர், தமக்கு முன்பு இருந்தவரும் தம் காலத்தவருமான இலக்கண ஆசிரியர் பலரைப் பலபடியாகக் குறிப்பிட்டுள்ளார் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/23&oldid=793284" இலிருந்து மீள்விக்கப்பட்டது