பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

109






ஏப்ரல் 2


ஓய்வில் சுகங்காணாது உழைப்பில் சுகங்காண ஆசை, இறைவா அருள் செய்க!

இறைவா, காற்று, உயிரின் காற்று. இறைவா, "வளி வழங்கு ஞாலம்” என்று புகழப் பெறும் காற்று. என்னே காற்றின் ஆற்றல்; ஓயாதொழியாது இயங்கும் காற்று. எனக்கோ நாள் ஒன்றுக்கு மூன்றில் ஒரு பங்கு கட்டாய ஓய்வு மாதிரி உறக்கம் கொடுந்திருந்தாலும் ஓய்வு போதவில்லை. வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வேண்டியிருக்கிறது! கட்புலனாகாத காற்றின் இயக்கத்தைப் போல் ஓயாது நான் உழைத்திட அருள் செய்க! காற்று, தன் திசையில் செல்லும்; தடைகள் ஏற்படின், தடைகள் நொறுங்கும். இறைவா, நான் எங்கே, குறிக்கோளை நோக்கிப் பயணம் செய்கிறேன்? இறைவா, இன்னொரு வேடிக்கை எனக்குத் தேவைகளும் ஆசைகளும் குறிக்கோளாகிவிட்டன! தேவைகளும் ஆசைகளும் குறிக்கோள்களா என்று எனக்கு என் புத்தியில் படவை.

வரலாற்றின் திசையை மாற்றுவது, சூழ்நிலையை மாற்றுவது, மனித குலமே பயனடையக்கூடிய ஒப்பற்ற காரியங்களைச் செய்வது போன்றவைதான் குறிக்கோளாக இருக்க முடியும். எனக்கு என்று குறிக்கோள் தேவை. இறைவா, எனக்கு என்று தனி நடை தேவை! இறைவா, நான் பல்லவி, அனுபல்லவி பாட ஆசைப்படவில்லை. புதிய சுருதியில் புதிய பண்பாடவே ஆசை. அதுவும் ஓய்வில் சுகம் காணாது உழைப்பில் சுகம் காண ஆசை உழைக்கவே ஆசை, இறைவா, அருள் செய்க!