பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

173






ஜூன் 5


என் உலகியல் வாழ்க்கையையும் ஆன்மீக வாழ்க்கையையும் இசைவித்து ஒரே வாழ்நிலையாகும்படி அருள் செய்க ! ,


இறைவா, மனத்தகத்தானாக எழுந்தருளி ஆட் கொண்டருளும் தலைவனே! நான் இருபாலும் ஒத்து வளர்ந்திட அருள் செய்க! என் ஒருவன் வாழ்க்கையிலேயே எத்துணை வேறுபாடுகள். வீட்டு வாழ்க்கை வேறு. சமுதாய வாழ்க்கை வேறு. திருக்கோவில் வாழ்க்கை நிலை வேறு.

அகத்து வாழ்க்கை வேறு. புறத்து வாழ்க்கை வேறு. ஒரு பாத்திரத்தின் உட்புறமும் வெளிப்புறமும் மாறுபாடாகவா காட்சியளிக்கும். இறைவா, நான்தான் என் அக வாழ்க்கை வேறு, புற வாழ்க்கை வேறு என்று வாழ்ந்து வருகிறேன்.

இறைவா, உலகம் ஒன்றே என்று உணர்த்திய உத்தமனே! அதுபோலவே என் வாழ்க்கையும் என்று உணர்த்தி வழி நடத்திய வள்ளலே! என் உலகியல் வாழ்க்கையும் ஆன்மீக வாழ்க்கையும் ஒன்றேயாக அமைதல் வேண்டும்! இறைவா, இங்ஙனமே அருள் செய்க!

அகத்தேயும் புறத்தேயும் வேறு வேறு வாழ்நிலைகளில் வாழ்தலைத் தவிர்த்திட அருள் செய்க. அமைதி அந்த அமைதி தழுவிய வாழ்க்கையே நிறை நலம் சார்ந்த வாழ்க்கை. இறைவா, அருள் செய்க!

சிந்தையொடு செயலிசைந்து நடந்திடும் வாழ்க்கையை, அகமும் புறமும் ஒத்திசைந்து நடந்திடும் ஞான வாழ்க்கையை அருள் செய்திடுக! இறைவா, இரட்டை நிலையிலிருந்து மீட்பாயாக! எங்கும் ஒரே நிலை! ஒரே வாழ்க்கை!

என் உலகியல் வாழ்க்கையையும் ஆன்மீக வாழ்க்கையையும் இசைவித்து ஒரே வாழ்நிலையாகும்படி அருள் செய்க. உள்ளும் புறமும் ஒத்த உயர்ந்த வாழ்நிலையை வழங்கி அருள்க!