பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

191






ஜூன் 23


இடரினும் தளரினும் நின் அருள்மனம் அமையும் வழியில் தொடர்ந்து வருவேன், அருள்க!

இறைவா, தடையிலா ஞானம் தந்தருள் செய்யும் ஞானமுதல்வனே, போற்றி! போற்றி! இறைவா, நான் வாழ ஆசைப்படுகிறேன். நன்றாக வாழ ஆசைப்படுகிறேன். முழுமையாக வாழ ஆசைப்படுகிறேன்!

ஆனால் நான் வாழ ஒரே ஒரு நிபந்தனை. இறைவா, ஏன் சிரிக்கிறாய். என்னைச் சிரித்து மயக்கிப் பயனில்லை! எனக்கு அருள் செய்ய வேண்டும்!

என் வாழ்க்கைப் பயணத்தில் தடைகள் வரக்கூடாது. சோதனைகள் வரக்கூடாது. துன்பங்கள், துயரங்கள் தலை காட்டவே கூடாது. இறைவா, என்ன மீண்டும் சிரிக்கிறாய், என்ன சொல்கிறாய்? வேதனை இல்லாமல் மகப்பேறு அடைய வேண்டும். உலைநீர் கொதிக்காமல் பண்டங்கள் வெந்தாக வேண்டும். நிலம் உழுபடாமல் விளைபொருள் தர வேண்டும். என்ன இறைவா, என்னைப் பார்த்து நகைக்கின்றாய்.

இறைவா, என்ன அருளிச் செய்கின்றன. வாழ்க்கைப் பயணத்தில் தடைகள் வரும். தடைகள் வருவதே வளர்ச்சிப் போக்குக்கு அடையாளம். சொர்க்கத்தின் வாயிலுக்கு அழைத்துச் செல்லும் பாதையில் எண்ணற்ற தடைகள் தோன்றும். துன்பங்கள் வரும். துயரங்கள் வரும்.

தடைகளைக் கடந்து பயணத்தை மேற்கொள்ளும் பொழுதுதான் நான் வளர்கின்றேன். இறைவா, நீ அருளிச் செய்வது முற்றிலும் உண்மை. தடையிலாத வழிநடை எங்கும் கொண்டு சேர்க்காது.

இறைவா, அருள் செய்க! இடரினும் தளரினும் உன் அருள் மனம் அமையும் வழியில் தொடர்ந்து வருவேன். வாழ்வேன். இறைவா, அருள் செய்க!