பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

193






ஜூன் 25


என் வாழ்க்கையின் சாரமாக அன்பு இருக்க அருள் செய்க!

இறைவா, எனக்கு எய்ப்பினில் வைப்பாக நின்றருளும் நிதியே. நின் திறம் போற்றி! போற்றி!! இறைவா, என் வாழ்க்கை வளமாக அமைய வேண்டும். நான் வேண்டுவ தெல்லாம் கிடைக்க வேண்டும்.

மகிழ்ச்சியாக வாழ்தல் வேண்டும். இன்பமாக வாழ்தல் வேண்டும். புகழுடன் வாழ்தல் வேண்டும். இறைவா, இவ்வளவும் எனக்குத் தேவை. இத்தகு வாழ்க்கையை நான் அடைய பெரிய மூலதனம் தேவை. இறைவா, பொற்கிழி தருகிறாயா?

இறைவா, வாழ்க்கைக்குப் பொருள் நடைமுறை மூலதனமே தவிர, அது முதலீட்டு மூலதனம் அல்ல. எனக்கு முதலீட்டு மூலதனம் தேவை. நடைமுறை மூலதனம் எப்படியும் சம்பாதிக்கலாம். முதலீட்டு மூலதனம் தேவை.

இறைவா, கோடி தொகுத்தவர் கூடத் துய்க்காமல் வாழ்வதைக் காண்கிறோம். எனவே, வாழ்க்கைக்குப் பணம் மூலதனம் அல்ல. இறைவா, அப்படியா! சரியான மூலதனத் தைக்காட்டியருளியுள்ளனை. நான் அன்பாக இருத்தல் என்பதே.

அன்பிற்கு ஈடான மூலதனம் உலகத்தில் இல்லை. இறைவா, இந்த மூலதனம் எனக்குக் கிடைக்குமா? அல்லது வேறுயாராவது எடுத்துக்கொண்டு போய்விட்டார்களா? அப்படியா! இறைவா, இந்த உலகில் யாரும் இன்னும் மூலதனத்தைக் காணவில்லை, எடுக்கவில்லை, பயன்படுத்தவில்லை.

இறைவா, உனக்கு ஆயிரம் ஆயிரம் போற்றிகள் கூறி வழிபடுகின்றேன். நான் எல்லாரிடமும் அன்பாக இருப்பதுவே வாழ்க்கையின் மூலதனம். இறைவா, என் வாழ்க்கையின் சாரமாக அன்பு இருக்க அருள் செய்க!

கு.X.13.