பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

235





ஆகஸ்டு 6



என்னை ஏழைமையிலிருந்து காப்பாற்றுக!

இறைவா, ஏழைபங்காளா! ஏழையேன் முகம் ஏறெடுத்துப் பார்ப்பது யார்? யாரிடம் சென்றாலும் "ஏழை” என்பதற்குரிய முத்திரையுடன்தான் வரவேற்பு. கல்விக் கோயில் முதல் கடவுட் கோயில் வரை காசுகளின் கொட்டம், பணத்தின் ஆட்சி. நான் என்ன செய்ய?

இறைவா, நீ என் வாழ்க்கையில் பங்கேற்க முன் வந்திருக்கிறாய். உண்மையில் என்னை உயர்த்துவது உன் திருவுள்ளமா? அல்லது என்னை உயர்த்துவது போல நடித்து நீ உயரப் போகிறாயா? இறைவா, என் ஏழைப் புத்தி அப்படிக் கேட்கச் சொல்கிறது! நீ இயல்பாகவே உயர்வற உயர்ந்தவன். இறைவா, என்னை ஏற்று, உயர் நிலைக்கு உயர்த்துக! கற்ற அறிஞனாக அவையில் நிறுத்தி உயர்த்துக. நூலறிவும் நுண்ணறிவும் வழங்கி வாழ்க்கையில் உயர்த்துக!

அறிவறிந்த ஆள்வினையில் ஈடுபடுத்தி இணையற்ற வாழ்நிலையில் வாழ்ந்திடச் செய்க! சால்பு நெறியில் நிற்கும் சான்றோனாக்கி அருள் செய்க! பண்பாட்டின் தலைப்பிரியா நெறியில் உயர்த்திடுக. நயத்தக்க நாகரிகத்தில் நிலை நிற்க அருள் செய்க. என்னை ஏழைமையிலிருந்து காப்பாற்றுக.

நான் அறிவுச் செல்வத்தில் வளர்ந்திடத் திருவுள்ளம் பற்றுக. சிந்தையின் நிறைவில் நின்று மகிழ்ந்திடும் பெரு வாழ்வினை அருள் செய்க! நின்னருள் பெற்று நின்று உயர்ந்து வாழ அருள் பாலித்திடுக!