பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





ஆகஸ்டு 25



இறைவா, ஒழுங்கினைக் கடைப்பிடிக்க அருள் செய்க!

இறைவா, "ஒழுங்குபடச் செய்க! ஒழுங்கு படவாழ்க!” என்று அறிவுறுத்துகிறாய். என்னால் முடியவில்லையே! பல ரோடு கூடிவாழ்கின்றேன். அவர்களின் உறவுகள் என்னிடம் ஏராளமான பாதிப்புகளை உண்டாக்குகின்றன; தர்க்கங் களைச் செய்கின்றன! இறைவா, இதனால் நான் விரும்புகின்ற ஒழுக்கத்தில், ஒழுங்கில் நிற்க முடியவில்லை.

இறைவா, ஒழுங்கு இருந்தால் போதுமா? ஒழுக்கமும் வேண்டாமா? இறைவா, என்ன சிரிக்கிறாய்! இரண்டும் ஒன்றேதானா? பொறிகளால் ஒழுகப்படுவது ஒழுங்கு - செயல்முறைகளில் காணப்பெறுவது ஒழுங்கு! புலன்களால் ஒழுகப் பெறுவது ஒழுக்கம்! இவ்விரண்டும் தேவை!

ஏன், இறைவா, ஒழுங்கு, ஒழுக்கம் இவற்றில் எது முதல்? எது எதற்கு ஆதாரம்: ஒழுங்கு-ஒழுக்கத்தினைப் பிரித்து முதனிலைப் படுத்த முடியாது! அப்படியா, இறைவா? ஆதார நிலையும் அப்படித்தானா?

புலன்களில் - மனதில் - உயிரில் நின்றியங்கும் ஒழுக்கங்கள் புறத்தே ஒழுங்குகளாக இயங்குகின்றன! இறைவா, புறத்தே பொறிவழி வாழ்க்கையில் ஒழுங்குகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஒழுக்கத்தினை வளர்த்துக் கொள்ளலாம்; பாதுகாத்துக் கொள்ளலாம்.

ஏன் இறைவா? ஒழுக்கம் இல்லாதவர்கள் நிலை என்ன? இறைவா, ஒழுக்கம் இல்லாதவர்கள் ஒழுங்குகளைக் கடைப்பிடித்தால் அவ்வழி ஒழுக்கமும் வந்தமையும். இறைவா, நீ வசமாக மாட்டிக் கொண்டாய்! இறைவா, ஒழுங்கு, ஒழுக்கத்தைத் தரும், வளர்க்கும் பாதுகாக்கும்!

இறைவா, நான் ஒழுங்காக வாழ - கடமைகளைச் செய்ய அருள் செய்க! இறைவா! இதுவே நியதி! விதி! அருள் செய்க!