பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

257





ஆகஸ்டு 28



அன்றாடம் தோன்றும் இடர்களை அன்றாடம் நீக்கிக் கொள்ளும் இயல்பினை இறைவா, அருள்க!

இறைவா, மனக்கவலை தீர்க்கும் மாமருந்தே! இறைவா, நான் என் வாழ்க்கைப் போக்கில் தோன்றும் சங்கடங்களை உடனுக்குடன் சரிசெய்து கொள்ளவேண்டும்.

என் வாழ்க்கையில் துன்பங்கள் தோன்றாமல் இல்லை. எண்ணற்ற இடர்ப்பாடுகள்; தொல்லைகள்; துன்பங்கள்! இறைவா, இவை என்னால் உணரத்தக்கன. ஆனால், என் வாழ்க்கையில் ஒரு அசாதாரணமான அலட்சியப் போக்கு! நாளை சரியாகப் போய்விடும் என்ற பொயம்மை தழுவிய மனப் போக்கு.

இறைவா, உண்மையில் நிகழ்வது என்ன? என்னுடைய சிறு சிறு சங்கடங்கள் வளர்ந்து பெரிய இடர்களாக வளர்ந்து விட்டன. என்னையே எடுத்துச் சாப்பிடும் இடர்களாக வளர்ந்து விட்டன. இந்தச் சூழ்நிலையில் அழுகிறேன்! இறைவா, நன்றருளிச் செய்தனை.

ஒரு பெரிய யானையை - இடர்ப்பாட்டில் சிக்கிக் கொண்ட யானையை. ஒரு சாதாரண உயிர்கூட வருத்த முடியும். இறைவா, என் வாழ்க்கையில் அன்றாடம் தோன்றும் இடர்களை அன்றாடம் நீக்கிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவேன். அன்றாடம் வாழ்க்கையில் புத்துணர்ச்சியிருந்தால் இடர்களை - தளர்வுகளைத் தாங்கிக் கடத்தி விடுவேன்.

எப்போதும் என்னுடைய வாழ்க்கையில் அசைவிலா ஊக்கம் கொண்டு ஓயாது உழைக்க அருள் செய்க! துன்பம் தொடரா நிலையைக் காண்பேன்! எந்நாளும் துன்பமில்லை என்பேன்! இறைவா, அருள் செய்க! வெற்றி பொருந்திய வாழ்க்கையை அமைப்பேன்! இறைவா அருள் செய்க!