பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

280

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






செப்டம்பர் 20


எண்ணிய எண்ணியாங்கு எய்தும் விழிப்பு நிலையினை
அருள் செய்க!

இறைவா, நின் அருள் திறத்திற்கு யாதுமோர் குறைவில்லை. நான் வளர்வதற்கு நீ வழங்கியருளிய வாய்ப்புகள் எண்ணில. ஆனால், நான் வாழ்ந்தேனில்லை. உன்னால் ஒன்றும் குறைவில்லை.

நான் வெள்ளத்துள் நா வற்றிச் சாவதைப் போல் செத்துக் கொண்டிருக்கிறேன். மழை பொழிந்தாலும் தளிர்க்க வேண்டியவை மரங்கள் அல்லவோ? வெள்ளப் பெருக்கேயானாலும் அள்ளிக் குடிக்க வேண்டியவை உயிர்களேயன்றோ? கதிரொளி காய்ந்தாலும் காணவேண்டியவை கண்கள் அன்றோ?

இறைவா, நின்னருள் வெள்ளத்திற்கு யாதொரு குறையுமில்லை. இறைவா, நின்னருளைப் பெற்று வாழ்தலுக்கு எனக்கு விழிப்புநிலை தேவை. எப்போதும் ஆயத்த நிலையில் இருத்தல் வேண்டும். நானோ தூங்கி வழிகின்றேன். கண்களை மூடிக்கொண்டே உலகத்தைப் பார்க்கிறேன்.

இறைவா, என் சிறுமையைத் தள்ளி ஆட்கொள்க. எப்போதும் விழிப்புநிலையில் என் உணர்வு இருக்க வேண்டும். எப்போதும் எதையும் சிந்தித்து உடன் முடிவு செய்யும் அறிவு நிலையில் என் உணர்வு இருக்க வேண்டும். எப்போதும் எதையும் எந்தவகை உழைப்பையும் ஏற்றுச் செய்யும் நிலையில் என் உடல்நிலை ஆயத்தமாக இருக்க வேண்டும். இறைவா அருள் செய்க!

விழிப்பு உடையார் வீழ்ச்சி அடையார். ஆயத்த நிலையில் அடையாத ஆக்கங்கள் இல்லை. இறைவா, அருள் செய்க என் உயிர் நிலையில் துடிப்பினை அருள் செய்க! எண்ணிய எண்ணியாங்கு எய்தும் விழிப்பு நிலையினை அருள் செய்க!