பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

288

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






செப்டம்பர் 28


சிந்தனை நின்தனக்காக்கி வாழ்ந்திட அருள் செய்க!

இறைவா, மந்திரமும் ஆகிய அண்ணலே! "மந்திரம்" என்றால் என்ன? நான் சில சொற்களை முணு முணுக்கின்றேனே! அதுவா, மந்திரம்? இறைவா, நீ அருள் செய்யும் திறப்பாடு வாழ்க!

மந்திரம் எழுத்தில்லை, சொல் இல்லை, சொல்லின் பொருளும் இல்லை! இறைவா, என்ன வியப்பு? இன்று மந்திரம் என்ற பெயராலேயே அன்பு மதம் புரோகித மதமாகிவிட்டது. பணம் செய்யும் தொழிலாக மாறிவிட்டது! எங்கு பார்த்தாலும் காட்டிரைச்சல்.

இறைவா, நீ, மந்திரம் என்பது சிந்தனை என்று உணர்த்தியருளிய திறத்துக்குப் பலகோடி போற்றிகள்! உன்னைப் பற்றிச் சிந்தித்தலே மந்திரம்!

இறைவா, உன்னோடு தொடர்பு கொள்ள வேண்டியது சிந்தனை! என் சிந்தனையை நான் வேண்டிய அளவுக்குத் தூண்டி விட்டுக் கொண்டு சிந்திப்பேன்.

இறைவா, நீ என் சிந்தனையில் தெளிவு கிடைக்க அருள் செய்க! சிந்தனைத் தெளிவில் நீ சிவமாக எழுந்தருளி ஆட்கொண்டருள்க!

இறைவா, நின்னை அடையும் சிந்தனையில் நான் வளர அருள் செய்க! இறைவா, சிந்தனை நின் தனக்கு ஆக்கி வாழ்ந்திட அருள் செய்க!