பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

290

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






செப்டம்பர் 30


என் வாழ்க்கையில் காலந்தவறாமை அமைய அருள் செய்க!

இறைவா, இன்று காலை மெல்லிய தண்ணளிமிக்க காற்று வீசிய காட்டின் சூழ்நிலை, இனிய குயில் இசை எழுப்பியது. எழுந்தேன். ஆம். இறைவா, குயிலின் இசையே என்ன எழுப்பியது.

கடிகாரம், நாட்காட்டி இல்லாத இயற்கை, காலம் தவறுவதில்லை. ஏன், இறைவா? காலந்தவற விடுதல் கூடாதா? ஆம், இறைவா! காலந்தவற விடாநிலையே வாழ்நிலை.

காலம் பொன் போன்றது. காலத்தினாற் செய்வதே பயன்பட்ட வாழ்நிலை பொருள் பொருந்திய வாழ்நிலை, இறைவா, எனக்கு அருள் செய்க!

இறைவா, என்னைச் சுற்றி ஓர் ஒழுங்குபட்ட உலகைக் காண்கிறேன். எங்கும் ஒழுங்கு. முறை பிறழாத நிகழ்வுகள். ஆம், இறைவா, என் வாழ்க்கையிலும் ஒழுங்கும், முறை பிறழாத செம்மையும் வந்தமைய வரம் தருக!

இறைவா, என் வாழ்க்கையில் காலம் தவறாமை அமைய அருள் செய்க! என் வாழ்க்கையில் காலத்தின் அருமையை உணர்ந்து செயலாற்றும் பாங்கினை அருள் செய்க.