பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

366

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





டிசம்பர் 15



இறைவா! வாழ்க்கையின் அச்சாகிய நம்பிக்கையை என் உயிரினும் மேலாகப் போற்றிட அருள்க!

இறைவா, நம்பினார் கெடுவதில்லை! இது நான்கு மறைத் தீர்ப்பு! இறைவா, நல்வாழ்க்கையின் அடித்தளம் நம்பிக்கை! தன்னம்பிக்கையும், பிறர்மீது நம்பிக்கையும் இன்றியமையாதன!

தன்னம்பிக்கையின்மை தன் வாழ்வையே கெடுக்கும்! பிறர் மீது நம்பிக்கையின்மை சமூக வாழ்க்கையைக் கெடுக்கும்! இறைவா, எனக்குரியன இரண்டு நம்பிக்கைகளுமே! இறைவா, என்ன இப்படிச் சொல்கிறாய்! எனக்கு இரண்டு நம்பிக்கைகளுமே இல்லையென்றா கூறுகிறாய்!

இறைவா, மன்னித்துக்கொள், மறுத்துக் கூறுவதற்காக! இறைவா, இரண்டுமே உண்டு! உண்டு என்று கூறக் கூடியவாறே இல்லை என்று கூறக்கூடிய அளவுக்கும் இருக்குகிறது. இதுவே உண்மை!

இறைவா, மின் இணைப்பில் மின் தொடர்புக்கட்டை இறுக்கமான தொடர்பு இல்லையானால் மின்னோட்டம் நிகழாது மின்சாரமும் பயன்பாட்டுக்கு வராது.

இனி, நான் மனிதர்களை நம்புகிறேன். முற்றாக, முழு வதுமாக மனிதர்களை நம்புகிறேன்! நான் என்னை மேலும் செழுமைப்படுத்திக் கொள்வதன் மூலம் இன்னொருவரையும் செழுமைப்படுத்திக் கொள்ளும்படி செய்வேன்! இது இயலும்!

இனி நான் யாரையும் குறை சொல்ல மாட்டேன். யாரிடமும் குற்றம் காண மாட்டேன். அவர்களை முறைப்படுத்த ஓயாது உழைப்பேன்.

என் வாழ்க்கையில் நம்பிக்கையின் வெளிப்பாடுகளாகிய நாணயம், நேர்மை, திறந்தமனம், திறந்த வாழ்க்கை முறை ஆகியவைகளை நான் பேணிப் பாதுகாப்பேன். இறைவா, வாழ்க்கையின் அச்சாகிய நம்பிக்கையை நான் என் உயிரினும் போற்றுவேன்! இறைவா அருள்க.