பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



44

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஜனவரி 28


நின் பணியே செய்ய அருள் செய்க!


இறைவா! ஞாலமே! விசும்பே! இவை வந்து போம் காலமே! "காலம் மாறிவிட்டது. காலம் கெட்டுவிட்டது! காலம் கலி காலம்!” என்றெல்லாம் பேசுவது வாழத்தெரியாதவர்களின் புலம்பல்! ஆசைகள் நேராகின் அனைத்தும் நேராகும்! இன்ப நேர்வு ஒருநிலையுடையதாக அமைதல் வேண்டும்! இன்பமேகூட பலமுனையினதாக இருப்பின் இன்னல்களே விளையும். எனக்கு இன்பமளிப்பவர்கள் என் நோக்கத்திற்கு இசைந்தவர்களாக இருத்தல் வேண்டும். அப்போதுதான் இன்பம் முறைபிறழாது. என்னை வாழ்விக்கும் தலைவனுக்கே ஆட்செய்ய வேண்டும். கொச்சைத்தனமான ஆசைகளுக்கு ஆட்பட்டு அடிமையாதல் கூடாது! இறைவா, என் இன்ப விழைவுகள் எனக்கு வேண்டியவரைச் சுற்றியே சுழலட்டும்!

இறைவா, என் கைகள் உன் பணியே செய்வதாக! என் கண்கள் நின் பணியே செய்க! இறைவா இந்த வரங்களை எனக்குத் தா! அதன்பிறகு காலமும் சூழ்நிலையும் எனக்கு ஏவல் செய்யும்! ஞாயிறே கூடத் திசைமாறித் தோன்றினாலும் எனக்குக் கவலை இல்லை! எனக்கு இன்பம் விளைவிப்பவர் உனக்கும் ஆட்பட்டவராக இருத்தல் வேண்டும்! இறைவா, அருள் செய்க! என் கைகள் உனது பணிகளையே செய்திடுதல் வேண்டும்! என் கண்கள் உனது திருவிழாக் கோலத்தையே காணுதல் வேண்டும்! இறைவா, அருள் செய்க!