140
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
பூவிரி உலகிற் புகழ்நனி சிறந்த
தண்டமிழ் நாட்டில் தரணிக்கு முதலாய்த்
தோன்றி மூத்த தொல்தமிழ்க் குடியின்
பெருநெறி யதனில் பிணங்கு புல்லுருவிக்
களையினை நீக்கிக் கறையெலாம் போக்கி
வாழ்வாங்கு வாழ வந்தது குறளியம்!
வசையிலாப் புகழ்சேர் வள்ளுவன் வாயுறை
வாழ்த்தெனத் தந்தது திருக்குறள் திருமறை;
குறளடி களினால் குறைவிலாப் பெருநெறி
சாற்றினன் ஞாலம் போற்று பேராளன்!
குவலயம் குறைகள் தீர்ந்து வாழ்ந்திடத்
தந்த குறளியம் இந்தவை யகத்து
வாழ்விய லாக அமைந்திடு மாயின்
மானுடம் கலிப்பகை வென்று வாழ்ந்திடும்;
குறளியத் தின்வழிக் குவலயம் நடந்தால்
அறிவ றிந்த ஆள்வினை யாலே
செல்வம் குவித்திடும் சிறந்து வாழ்ந்திடும்;
உயிர்ஒப் புரவு நெறிநின் றோங்கிடும்:
ஈதலும் இசைபட வாழ்தலும் உண்டு;
மனையக மெல்லாம் மாண்படை யோரும்
மாநில மெல்லாம் மாதவத் தோரும்
அறத்தினை வளர்த்துச் சீலம் பெருக்குவர்;
பிரிவினைப் பிணக்கால் பேதுற் றிருக்கும்
நிலமகள்.
பொருளைச் செய்து போற்றா தவரால்
பல்குழு வால், பாழ் செய்யும் உட் பகையால்,
வேந்தலைக் கும்கொல் குறும்பால் நடுக்குறும்;
குறைகள் எல்லாம் விரைவில் நீக்கி
நிறைகள் நல்கிடும் குறளியம், உறுதி
குறளியம் வையகப் பொதுநெறி யாகுக!
குறளியம் வழங்கிப் பெரும்புகழ் கொள்ளும்
வேலா வாழ்க, வாழ்க!
குறளியம் போற்றுமின்: வரலாறு படைமினே!