பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

95


7

யிலைக் குருமணி அவர்களின் கருணையால் ரெங்கநாதன் பழுத்துவிட்டான். அதாவது சந்நியாசியாகி - விட்டான். கந்தசாமிப் பரதேசி என்பது தீட்சாநாமம், ரெங்கநாதன் துறவு பூண்டது அவனுடைய பெற்றோருக்குத் தெரியாது. பெற்றோரின் அனுமதியைப் பெற முயற்சித்ததில் தாயாரின் அனுமதி கிடைக்கவில்லை. அனுமதி கிடைக்காதது மட்டுமல்ல மடத்துக்கு வேலைக்குப் போகவே. வேண்டாம் என்பது தாயார் ஆணை. என்னென்னவோ சமாதானங்கள், உறுதிமொழிகளைத் தாயாரிடம் கூறிவிட்டு, மீண்டும் பணிக்கு வந்து சேர்ந்தான் ரெங்கநாதன்! கயிலைக் குருமணி அவர்களிடம் இசைந்தபடி யாத்திரைக் காஷாயம் வாங்கிக்கொண்டான்.

மடங்களின் மரபுப்படி முதலில் யாத்திரைக் காஷாயம் தான் தருவார்கள். இது-காவித்துணியைப் பூஜை மடத்தில் வைத்து எடுத்து உடுத்திக் கொள்ளச் சொல்வதாகும். உடன் அவர்கள் யாத்திரை செல்லவேண்டும். அவரவர் சத்திக்கு ஏற்பவும், மகாசந்நிதானம் அவர்களின் உத்தரவுக்கு ஏற்பவும் யாத்திரை செல்ல வேண்டும். பழைய காலத்தில் உண்மையாகவே பரதேசியாக யாத்திரை செல்ல வேண்டும். பிக்ஷை முதலியன பெற்று உயிர் வாழ்ந்துகொண்டு யாத்திரை செல்ல வேண்டும். பெரும்பாலும் நடை! காலப்போக்கில் நடுத்தர வசதியுடைய யாத்திரையாக இது மாற்றம் பெற்றது. .

யாத்திரை முடிந்து வந்தவுடன் பக்குவம் நோக்கி மந்திரக்காஷாயம் தந்தருளுவார்கள். மந்திரக் காஷாயத்துக்கு முன்பு சிவபூஜை எழுந்தருளச் செய்து தருவார்கள்! மந்திரக் காஷாயம் என்பது மகாசந்நிதானம் அவர்கள் திருக்கரங்களால் பூசனை செய்யப் பெற்ற காவித்துணி தருவதாகும். மந்திரக் காஷாயம் பெற்ற நிலையில்தான் பரதேசியாக இருந்தவர். மடத்துத் தம்பிரான் ஆவார்.