பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

219



34

குன்றக்குடிக்கு அருகில் கொரட்டி என்ற சிற்றுார் உள்ளது. கொரட்டியில் 1977-ல் திடீர் திடீர் என்று வீடுகளில் தீப்பிடித்தது. காவலில் நிற்கவில்லை; மந்திரங்கள், பூஜைகளாலும் நிற்கவில்லை, இச்சமயத்தில் வீடுகள் எரிந்த சாம்பலை வைத்துக் கண்டுபிடிக்கலாம் என்று கருதி காரைக்குடியில் மத்திய மின்வேதியியல் விஞ்ஞானிகளை அணுகினோம். நான்கு விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அவர்களின் ஆய்வு, முடிவினைத் தரவில்லை. அப்போது தனித்தனியே அவரவரைப் பாதிக்கும்படியான ஒரு செயலைச் செய்ததில் அடங்கியது. தேங்காய்களை மந்திரித்து ஊரார் ஒவ்வொருவருக்கு ஒன்று கொடுத்து, "தீ வைக்கிறவர் யாரோ அவர் வீட்டில் உள்ள தேங்காய் உடையும். உடனே அந்த வீட்டில் மரணம் நேரும்” என்று சொல்லப்பட்டது. கொடுத்தபிறகு தீப்பிடிக்கவில்லை. தன்னைச் சுடும் என்றால் ஏற்படும் பயம் பிறரைச் சுடும் என்றபோதும் தேவை அல்லவா?

இளமைக் காலம் தொட்டு நம்மிடம் வளர்ந்து வந்த மனிதநேயம் 'திருக்கோயில்களைத் தழுவிய குடிகளும் குடிகளைத் தழுவிய திருக்கோயில்களும்' என்ற கோட்பாடாக உருப்பெற்றது. இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் நமது ஆதினத் திருக்கோயில்களின் விழாக்களில் சமுதாய மேம்பாட்டுக் கருத்தரங்குகள், ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பெற்றன. முதற்கூட்டம் 1962-ல் திருப்பத்தூர் திருவிழாவின்போது நடந்தது. இதன் செயற்பாடாகக் குன்றக்குடியில் மருதுபாண்டியர் காதி கிராமத் தொழிற் கூட்டுறவு சங்கமும் நேருஜி காகித அட்டைப் பெட்டி செய்யும் தொழிலும் தொடங்கப் பெற்றன. இது மெள்ள வளர்ந்து கிராமத் திட்டக்குழுவாக 1977-ல் வடிவம் பெற்றது.