பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பணியாற்றி வருகிறார். மிகச் சிறந்த மதிநுட்பம் படைத்தவர்; நல்ல நிர்வாகி. அவர்தாம் ஏ.ஆர். சுப்பய்யர்!

நல்ல முறையில் பணி செய்துவரும் தமிழ்ச் சங்கங்களில் டெல்லி தமிழ்ச் சங்கம் முதன்மையானது. டெல்லி தமிழ்ச்சங்கம் கொண்டாடிய பாரதி விழாவில் ஜவஹர்லால் நேருவுக்குப் பக்கத்தில் இருக்கவும் அவர் முன் பேசவும் கூடிய இனிய வாய்ப்பு நமக்குக் கிடைத்தது. அளவற்ற மகிழ்ச்சி. ஆதர்ச புருஷராக விளங்கியவர் அருகில் நிற்கவும் பேசவும் வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்ச்சிக்குச் சொல்லவும் வேண்டுமோ? அப்போது டெல்லிக்குச் செல்லும்போது 'சட்டை' அணிந்த கோலம்.

பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் தமிழ் நாட்டில் கல்விப் புரட்சி நடந்தது. தாமரைச் செல்வர் நெ.து. சுந்தரவடிவேலு தமிழ்நாடு கல்வி இயக்குநர். நெ.து.சுந்தரவடிவேலு சிறந்த சமூகச் சிந்தனையாளர். தமிழ்நாட்டில் கல்வியை மக்கள் இயக்கமாக்கிய பெருமை சுந்தரவடிவேலு அவர்களுக்கே உரியது. வீதிகள்தோறும் வீடுகள்தோறும் கல்வியைப் பற்றியே பேச்சு! பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள். பள்ளிகளுக்கும், பள்ளிகளின் மேம்பாட்டுக்கும் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பெற்றன. இயக்குநர் சுந்தரவடிவேலு நிறையப் பயணம் செய்தார்; பேசினார் அவருடைய பேச்சு தூண்டு கோலாக விளங்கியது. 'இத்தகையதொரு பள்ளிச் சீரமைப்பு மாநாட்டை ராமநாதபுர மாவட்டத்தில் நடத்தவேண்டும்... அதற்குப் பண்டித ஜவஹர்லால் நேருவை அழைக்கவேண்டும். இது நமது விருப்பம், இயக்குநர் நெது. சுந்தரவடிவேலு ஏற்றுக் கொண்ட விருப்பம். பெருந்தலைவர் முதலமைச்சர் காமராஜரும் இசைவு தந்துவிட்டார். மாநாட்டுப் பணிகள் சுறுசுறுப்பாக நடந்தன.