240
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
பொருளாதாரத்தை வரன்முறை செய்து சேமித்து வைக்காமல் வாழ்க்கை நடத்துவது, மழை பெய்யும் போது நீர் வேட்கைதீர அண்ணாந்து வாயைப் பிளப்பது போன்றது தான். வரன்முறை செய்யப் பெறாத பொருளாதாரம் வாழ்க்கைத் தேவையை நிறைவேற்றாது-சேமித்து வைக்கப் பெறாத நீர், நீர் வேட்கையைத் தீர்க்காது.
கொடிக் கம்பத்தை நட்டதும் நிழல் விழுவது போல, நாம் ஒரு செயலைச் செய்யத் தொடங்கியதும் அதனை எதிர்ப்பவர்களும், ஏளனம் செய்பவர்களும் தோன்றத்தான் செய்வார்கள். நிழலைக் கொடிக் கம்பம் பொருட்படுத்தாது போல, தொண்டு செய்கிறவர்களும் எதிர்ப்பையும் ஏளனத்தையும் பொருட்படுத்தக் கூடாது.
ஆரோக்கியம் ஏற்படும் என்றால் வலியையும் பொறுத்துக் கொண்டு நாம் ஊசி குத்திக் கொள்வது போல, இந்த நாட்டுக்கு நன்மை என்றால் நமக்குச் சிறு சிறு இழப்புக்கள் ஏற்பட்டாலும் அதைப் பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டும்.
அகன்று விரிந்த தட்டில் உழக்குப் பாலைக் கொட்டினால், பாலின் அளவு குறைவாகவே தோன்றும். ஆனால் அதை உழக்கிலேயே ஊற்றி வைத்தால் நிறைய இருப்பது போல் தோன்றும். அதுபோல, சுதந்திரத்திற்குப் பிறகு இந்த நாடு பொருளாதாரத் துறையிலும், வாழ்க்கைத் துறையிலும் விரைந்து முன்னேறியிருந்தாலும், நாற்பத்தாறு கோடி மக்கள் வாழுகிற பரந்த நாடாதலின், இங்கு ஏற்பட்டிருக்கிற