அடிகளார் உவமை நயம்
265
பிழையைத் திருத்தும் - பிழையிலிருந்து நம்மை விடுவிக்கும், பிறப்பைத் தடுக்கும், பேரின்பத்தை அளிக்கும்.
படிப்பவர்களின் எண்ணிக்கையையும் தரத்தையும் பொறுத்தே பத்திரிகைக்குப் பெருமை என்பது போல கும்பிடுகிறவர்களின் எண்ணிக்கையையும் தரத்தையும் பொறுத்தே நெறிக்கும் கடவுளுக்கும் பெருமை ஏற்படும்.
பாலிலே தண்ணிர் கலப்பதும், அரிசியிலே கல்லைக் கலப்பதும் எவ்வளவு பெரிய குற்றமோ அதைவிட மாபெரும் குற்றம் சிந்தனையிலே நஞ்சு கலந்து மக்கள் மத்தியிலே உலவ விடுவது.
வீடில்லாதவர் வாழ்க்கையில் வெய்யில் வருத்துவது போல, சமூகம் இல்லாதவர் வாழ்க்கையில் பகை வருத்தும், வீடில்லாதவர் வாழ்க்கையில் குளிர் வருத்துவது போல சமூகம் இல்லாதவர் வாழ்க்கையில் அழுக்காறு வருத்தும். சமூக வாழ்க்கை மிக மிக முக்கியமானது. அதுதான் கடவுள் பக்தி என்று நான் கருதுகிறேன்.
உள்ளத்தில் உள்ள சக்திதான் பக்தி-அதைப் பயன்படுத்திச் செயலாக்குவதுதான் தொண்டு. பக்தியும் தொண்டும் உடலும் உயிரும் போல; மலரும் மணமும் போல.
வானம் மழை பொழிந்தால் மண்ணில் மரம் செடி கொடிகள் தழைக்கும் என்பது போல, மனித மனத்தில் அன்பு மழை பொழிந்தால் மனித சமுதாயம் செழிக்கும்!
கு.xvi.18