பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

375



வேளாண்மைத் தொழில் எல்லாத் தொழிலையும் விடச் சிறந்தது; சுதந்திரமானது; நிலையானது. விவசாயப் பொருள்களின் விலை நிர்ணயம், உற்பத்தி செய்த பொருள்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு உரிய ஏற்பாடுகள் தேவை.

வேலை தேடிப் போக வேண்டாம்!
வேளாண்மையில் ஈடுபடுவோம்!


7. கால்நடை பொருளாதாரச் சிந்தனைகள்

(24-9-94 அன்று மதுரை வானொலியில் ஆற்றிய உரை)

மனித வாழ்க்கையில் கால்நடைகள் வகிக்கும் பங்கு மிகவும் பெரியது ஆகும். மனிதனுக்கு உற்ற தோழமையாக வளர்ந்து, வாழ்ந்து அவனுக்கு ஊட்டம் தருவனவாகவும், ஆக்கம் தருவனவாகவும் விளங்கும் பெருமை கால்நடைகளுக்கே உண்டு.

மனிதனின் இன்றியமையாத் தேவைகளாகிய உணவு, உடை, களிப்பு, மகிழ்ச்சி, காவல் என துறைதோறும் கால் நடைகள் முக்கியமான இடத்தைப் பெற்று வந்து உள்ளன; பெற்று வருகின்றன. விவசாயத் தொழிலுக்கும் கால்நடைகள் தேவை. நிலத்திற்கு வளம் காக்கும் தொழு உர உற்பத்திக்குக் கால்நடைகள் மிகவும் தேவை மட்டுமல்ல, இன்றியமையாதவையுமாகும்.

கால்நடைகள் இல்லையேல் விவசாயம் இல்லை; உணவு இல்லை; ஏன் மனிதகுல வாழ்க்கையின் ஆதாரமே கால்நடைகள் என்றால் மிகையாகாது. அதனாலேயே செல்வத்திற்கு "மாடு” என்று பெயர் சூட்டியது வள்ளுவம்.