பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

408

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அதுபோலச் சலுகைகளால் மக்கள் வளர்ந்துவிட மாட்டார்கள்.

ஒவ்வொரு குடும்பமும் தன்னிறைவுள்ள குடும்பமாக அமையவேண்டும்; வளரவேண்டும். நாடு, நாடா வளத்ததாக அமையவேண்டும். ஒவ்வொர் இளைஞனும் சுயமுயற்சியில் பொருள் ஈட்டி, அப்பொருளால் தானே முயன்று கட்டிய வீட்டில் குடியிருக்க வேண்டும். தான் ஈட்டிய பொருளில் பலரோடு கூடி உண்ணவேண்டும்.

“தம்மில் இருந்து தமது பாத்துண்டற்றால்” என்றார் திருவள்ளுவர். இலட்சிய சமுதாயத்தில் உழவுக்கும் தொழிலுக்கும் மதிப்பு உண்டு. காடுகளைத் திருத்திக் கழனிகளாக்குவோம்! ஆலைகளையும் தொழிற்சாலைகளையும் அமைப்போம்! உழைப்பவர் உலகை மதிப்போம்! பொருளினைச் செய்வோம்!

வாழ்க்கை உணவினால் மட்டும் ஆனதல்ல. வாழ்க்கைக்குக் களிப்பும், மகிழ்ச்சியும் தேவை. களிப்பும் மகிழ்ச்சியும் நாடகம், திரைப்படம் ஆகியவைகளினால் கிடைக்கும். திரைப்பட உலகம் தோன்றிய பிறகு, நாடக உலகம் வெகுவாகக் குறைந்து வருகிறது. இன்று எங்கும் திரைப்பட மயக்கம். அந்தத் திரைப்படங்களாவது மனிதர்களை அவர்கள் நிலையிலிருந்து உயர்த்துகின்றனவா என்றால் அதுவும் இல்லை.

இன்றைய திரைப்படங்களில் காமக்களியாட்டம், வன்முறை நிகழ்ச்சிகளே அதிக இடம்பெறுகின்றன. திரைப்படம் ஒரு நல்ல கலையே. திரைப்படத்தில் நல்ல இசை மற்றும் கலையம்சங்களும் உண்டு. இசையை அனுபவிக்கும் வாழ்வு தேவை. இலங்கையை வருணித்த கம்பன் “களிக்கின்றார் அலால் கவல்கின்றார், இவர்” என்றான். கலையும் இலக்கியமும் ஆன்மாவைப் பக்குவப்படுத்தும் தன்மையன.