பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

424

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



சங்க காலத்தில் சமூக அமைப்பு இருந்தது. எல்லாக் குடும்பங்களிலும் மகிழ்ச்சி நிலவ வேண்டும் என்பதே தமிழ் நெறியின் குறிக்கோள். "எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்த வேண்டும்" - இது தமிழின் குறிக்கோள்! தமிழனின் குறிக்கோள்! தமிழ் இலக்கியம் காட்டும் பொருள் நெறி.

பக்குடுக்கை நன்கணியார் என்ற புலவர் "எல்லாருக்கும் இன்பம்” என்ற கொள்கையை வலியுறுத்துகின்றார். ஒரு வீட்டில் சாப்பறை கொட்டப்படுகிறது. ஒரு வீட்டில் மனமுரசு கேட்கிறது. ஏன் இந்த அவலம்! அருகில் நிற்போர் கடவுளின் படைப்பு என்கின்றனர்.

புலவர் இன்பதுன்பங்களுக்குக் கடவுளின் படைப்பு காரணம் என்பதை மறுக்கிறார். மறுப்பதோடன்றி, அப்படிக் கடவுள் படைத்திருந்தால் அக்கடவுள் பண்பில்லாதவன் என்று கூறுகிறார். அது மட்டுமா? இந்த உலகம் இன்னாததாகத்தான் இருக்கும். இன்மையை - இன்னாமையைத் தாங்கிக் கொள்ளாதே! இன்னாதனவாக உள்ள உலக அமைப்பை எதிர்த்துப் போராடு! இனியன காணும் வரையில் போராடு! என்றார்.

"ஓரில் நெய்தல் கறங்க, ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைத லுண்கண் பணிவார் புறைப்பப்
படைத்தோன் மன்ற, அப்பண்பிலாளன்
இன்னா தம்ம இவ்வுலகம்
இனிய காண்க, இதன் இயல்புணர்ந்தோரே!”

(புறம் - 194)

என்ற பாடலை, பாடற்பொருளை இலட்சியமாகக் கொண்டு நடப்போமாக!