பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

464

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்



கலைவாணி புத்தகாலயம் வெளியிட்டுள்ள "புனித நெறியை” வாங்கிப் படியுங்கள். உயர்ந்த கருத்து, திருக்குறளும், திருமந்திரமும் திருமுறைகளும் அளிக்கும் பொருத்தமான மேற்கோள்கள், சலசலத்தோடும் அருவி நடை, வரிக்கு வரி வாழ்வை உயர்த்தும் பண்பாடு-எல்லாம் ஒருங்கே அடிகளார் நூல்களிற் காணலாம்.

கடவுள் யாதினும் இனியன், யாவர்க்கும் நல்லான், நெஞ்சக் கோயிலான், ஓயா உழைப்பாளி, அன்பின் பித்தன், அடியார்க்கு எளியோன் என்று அடிகள் விளக்குகிறார். அவனருளே கண்ணாகக் காணும் பெற்றியைத் துலக்குகிறார். சைவ நெறியைத் தெளிவாக மனதிற் பதிய வைக்கிறார். சைவவுணவு, சரியை கிரியை யோக ஞான சாதனம் எல்லாம் எளிய நடையில் சிறுசிறு கட்டுரைகளாக இந்த நூலிற் காண்போம். துறவு எது? உண்மைத் தொண்டர், பத்திமை என்னும் வித்து, உய்யும் நெறி, பொய்யிலா அடிமை, அகப் பகையை வெல்க முதலிய கட்டுரைகளை ஊன்றிப் படியுங்கள். சைவ ஒளி உங்கள் மனதிற்புகும். புலன்-கதவுகள் திறக்கும், திருவருட் சோதி இறங்கி வாழ்வில் இன்பமே சூழும், எல்லோரும் இனிது வாழ்வீர்.

கலைவாணி புத்தகாலயம் வெளியிடும் ஆன்மக் கருவூலங்களை ஆர்வமுடன் வரவேற்கிறேன். கலைவாணி புத்தகாலயம் பொலிவெய்தி வாழ்க! மலைவாணியின் கருத்தருவி கலைவாணியின் யாழிற் பாய்ந்து முழங்குக.

நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!
இன்பமே சூழ்க! எல்லோரும் வாழ்க!

சுத்தானந்த பாரதி
20-10-73

யோக சமாஜம்
அடையாறு சென்னை-20