பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

473



7. வானொலியில்


1975 வைகாசி

இரா. நெடுஞ்செழியன்
கல்வி, சுற்றுலா அமைச்சர்.


அணிந்துரை


'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற குறிக்கோளை உள்ளத்தே கொண்டு துறவிக் கோலம் பூண்டு, தமிழ்த் தொண்டு ஆற்றிய சீரியோர் சிற்சிலர், பழங்காலந்தொட்டு செந்தமிழ் நாட்டில் இருந்து வந்திருக்கின்றனர். இந்தக் காலத்தில், அத்தகைய தலைமுறையைச் சார்ந்தவர் என்று மதிப்பிடத் தக்க முறையில், அருந்தமிழ்த் தொண்டு ஆற்றி வருபவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆவார்கள்.

'எதிலும் தமிழ் எங்கும் தமிழ்' என்ற கொள்கையில் உறுதி பூண்டு, தமிழ் எல்லா வகையிலும் மேம்பாடு எய்தவும், தமிழர்கள் எல்லாத் துறைகளிலும் சிறப்பு அடையவும், தமிழ் நாடு எல்லா நெறிமுறைகளிலும் முன்னோடியாக விளங்கவும் வேண்டும் என்பதற்காக, அடிகளார் அவர்கள், தமது நேரம், நினைப்பு, உழைப்பு, ஊக்கம், அறிவு, ஆற்றல், முனைப்பு, முயற்சி ஆகிய எல்லாவற்றையும் பயன்படுத்தி வருகிறார்கள்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார். அவர்கள் சிறந்த சிந்தனையாளர்; நல்ல தமிழ்ச் சொற்பொழிவாளர்; அழகு தமிழ் எழுத்தாளர்; பொதுத் தொண்டு புரியும் பெற்றியாளர்; பழகுவதற்கேற்ற பண்பாளர்.

அடிகளார் அவர்கள் அவ்வப்போது வானொலியின் வாயிலாக ஆற்றிய சீரிய உரைகளைத் தொகுத்து 'வானொலியில் அடிகளார்' என்ற பெயரில் இந்நூலினை வெளிக்கொண்டு வந்துள்ள "கலைவாணி புத்தகாலயத்தினரைப் பாராட்டுகிறேன்".

கு.xvi.31

கு.xvi.31