பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

498

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்



இவை போன்ற பாராட்டுக்குரிய எத்தனையோ சிறந்த கருத்துக்கள் பிரார்த்தனைகளாக, இந்நூலில் திகழ்கின்றன. "வாழையைப் போலச் சமுதாயத்திற்கு முழுதும் பயன்பட்டு வாழ வேண்டும்; தென்னையைப் போல் நன்றியை இளநீராகக் கொடுக்க வேண்டும். எருதினைப் போல் உடல் நோவினைப் பாராது உழைக்க வேண்டும். நிலத்தைப் போல் கொத்தினாலும் வெட்டினாலும் நன்மையே செய்ய வேண்டும்” என்பதாக வரும் பல பிரார்த்தனைகள் நல்ல பண்புகளை ஊட்ட வல்லனவாய் அமைந்துள்ளன.

அடிகளார் ஓரிடத்தில் பசுவைப் பற்றிச் சொல்லும் போது பசு தன் வாழ்நாளில் 24,690 பேருக்கு ஒரு வேளைக்குத் தேவையான பாலைப் பொழிந்து தருவதைக் கணக்கிட்டுக் காட்டுகின்றார்.

கணக்கு, தமக்குப் பிடிக்காத பாடம்தான் என்று கூறும் அடிகளார், கணக்கின் முறைகளை உவமைப்படுத்தி வாழ்க்கையையும் ஒரு கணக்காகக் காட்டுவதும், "வாழ்க்கை யாகிய கணக்கில் அறிவைக் கூட்ட வேண்டும்; கெட்டவைகளைக் கழிக்க வேண்டும்; ஆற்றல், செல்வம், அன்பு போன்ற நல்லவற்றைப் பெருக்க வேண்டும்; வையம் உண்ண வகுத்துக் கொடுத்து வாழ வேண்டும்" என்றெல்லாம் கூறி, வாழ வழிகாட்டும் பகுதிகள் மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றன. தனக்காக மட்டும் வாழ்வது விலங்கின் தன்மை. பிறர்க்காக வாழ்வதே மனித தருமம் என்பதைத் "திருவருட் சிந்தனை” மூலமாக எடுத்துக் காட்டும் அடிகளார், "மனம் திருந்தி விட்டால் மண்ணில் சொர்க்கம்” “பூசைகள் நேராகின் அனைத்தும் நேராகும்” என விளக்குகிறார்.

இத்தகைய உயர்ந்த சிந்தனைகளைக் கொண்டு விளங்கும் இந்நூலைக் கற்பவர், அடிகளார் அறிவிப்பதைப் போல, அடுத்த தலைமுறைக்கு வெறும் "குரு பூசை" "திதிப் பொருளாக" மட்டும் போய் விடாமல், மரணத்தை வென்று மரணமிலாப் புகழ் வாழ்க்கையில வாழ்வார்கள் என்பது உறுதி.