பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6


இம் மடலம் ‘திருக்குறள்’ பற்றிய சிந்தனைத் தொகுப்பாகும் வள்ளுவம் பற்றி அவர் வெவ்வேறு காலங்களில் எழுதியன அனைத்தும் இந்நூலுள் ஒருவழித் தொகுத்துத் தரப் பெற்றுள்ளன. இவை ஒவ்வோரதிகாரத்தையும் அவ்வதிகாரத்துள் வரும் ஒன்றிரண்டு குறள்களால் தொடங்கிப் பின்பு பல்வேறு சிந்தனைத் தொடர்களாகக் கிளைவிட்டுப் படர்கின்றன.

இதில் திருவள்ளுவர் காலப் பின்னணியும் அச்சூழலின் எதிரொலியாக அவர் திருக்குறள் யாக்க நேர்ந்த நிலைமையும் விளக்கப் பெற்றுள்ளன.

திருக்குறளை அவர் வாழ்ந்த காலச் சூழ்நிலையுடன் - அதாவது இக்கால அரசியல், மன்பதையியல், பொருளியல் ஆகியவற்றுடன் இணைத்துப் பார்க்கும் முறையே, பெருமளவில் காணப்படுகிறது.

வள்ளுவத்திற்கு அவர் தரும் ‘புதிய பார்வைகள்’ பல பளிச்சிடுகின்றன. அவர் ஒரு ‘பகுத்தறிவுச் சமயவாதி’யாக வெளிப்படுகிறார். இவரை விவேகானந்தருடன் ஒப்பிடலாம். என்றாலும் மூடநம்பிக்கைகளைத் தகர்த்தெறியும் இத்தகையதொரு ஆன்மிகவாதியை நாம் காண்பதரிது.

தமிழன் தலைநிமிர வேண்டுமெனில், தந்தை பெரியாரின் பணியும் தேவை என உணர்ந்தவர் இவர். சிறந்த மார்க்சிய, லெனினியச் சிந்தனையுடைய முற்போக்காளர் இவரெனில் மிகையாகாது. மக்களுடன் மிக நெருங்கிப் பழகியதால், இவரது பார்வைகள் தெளிந்த, ஒளிவீச்சுக்களாகக் கானப்படுகின்றன.

வள்ளுவத்தை நெஞ்சார விளங்கிக் கொள்ள இந்நூல் பெருந்துணையாகுமென, ஒங்கும் குரலெடுத்து, உரக்கக் கூற விழைகின்றேன். அதற்காக இது ‘தெய்வத்தின் குரல்’ என்று கூறமாட்டேன். திருவள்ளுவர் தாம் ஒரு மனிதராக நின்றே, இந்த மன்பதை சார்ந்த மனிதர்களுக்கு ‘மனிதத்தை’, மனிதனின் மொழியில் எடுத்துரைத்தார். அதை அடிகளார் என்ற ‘மனிதர்’ நம் காலத்தில் பிறந்து, நமக்கு விளக்கியுள்ளார்.