பக்கம்:குறட்செல்வம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

அணிந்துரை

குருமகா சந்நிதானம் சீலத்திரு

ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள்.

'குறட் செல்வம்’ எனப் பெயருடைய தமிழுரைச் செய்யுள், திருவள்ளுவர் அருளிய பாச் செய்யுளை ஆராய்ந் தெழுதியதாகும். நாற்பத்தேழு தலைப்பில் குடிமை, ஊழ், மொழியுறவு, மக்கள், அறம், பொருள், இன்பம், வீடு முதலிய பல பொருள் குறித்த நுண்பொருட் பெருந் திறனாய்வுக் கட்டுரைத் தொகுப்பாய் விளங்கிக் கற்போர் அறியாமையைக் களைந்து, மெய்ப் பேரறிவை வளர்ப்பதாக உள்ளது. இச் செந்தமிழ்ப் பனுவல்.

இதன் ஆசிரியர் குன்றக்குடி அடிகளார் என வழங்க விளங்கும் திருவண்ணாமலை ஆதீன குருமகா சந்நிதானம் சீலத்திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்கள், மதி நுட்பம் நூலோடு உடையார்; நுண்மாண் நுழைபுலம் மிக்க சான்றோர்: சொற்பொழிவில் வல்ல பொருட்பொழிவாளர்; பற்பல பனுவல் எழுதிய ஆசிரியர், அவர்கள் சீலத்தை அறிந்து கொள்ள விழையும் அன்பர் அனைவரும் இதில் 34 ஆவது தலைப்பின் (பக்கம்.117) முடிவுரையை நோக்குதல் இன்றியமையாதது.

நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலையாயது யாது! அதைத் தங்களது கடனாகக் கொண்டு உலகிற்கு ஆற்றும் நெறிவழுவாத அவர்களே இன்ன சீரிய நூல் ஆக்கத்திற்கு உரியவர்கள். அவர்கள் நீடினிது வாழ்க. இன்ப அன்பாகிய சிவானுபூதியில் திளைக்க.

இவ்வாசிரியர் நூல்களை வழக்கமாக மிக்க சிறப்புடன் அழகாக வெளியிட்டு வரும் கலைவாணி புத்தகாலயத்து முதல்வர், நிறைநாட் செல்வர், சீனி. திருநாவுக்கரசு அவர்கள் இச் செல்வத்தையும் மற்ற எட்டுச் செல்வத்தையும் எய்தி நன்கு வாழ்க!

சீலத்திரு ஞானப்பிரகாச தேசிக

பரமாசாரிய சுவாமிகள்.

மெய்கண்ட தேவர் ஆதீனம்
காஞ்சிபுரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/6&oldid=1551569" இலிருந்து மீள்விக்கப்பட்டது