பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124


இத்தொகை தொகுப்பித்தார் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறையார்' என்று ஐங்குறு நூற்றின் இறுதியில் எழுதப்பட்டிருக்கிறது.)


யா, சே. மா. சே. இரும்பொறை எத்தனையாண்டு அரசாண்டான் என்பது தெரியவில்லை. புலத்துறை முற்றிய கடலூர்கிழார் வான நூல் அறிந்தவர். ஒருநாள் இரவு வானத்தில் விண்மீன் ஒன்று சுடர்விட்டு எரிந்து விழுந்ததை அவர் கண்டார். அப்போது அவர் வான நூலைக் கணித்துப் பார்த்து யா. சே. மா. சே. இரும்பொறை ஏழாம் நாள் இறந்து விடுவான் என்று அறிந்தார். வானத்தில் விண்மீன் எறிந்து விழுந்தால் அரசன் இறந்து விடுவான் என்பது வான நூலார் நம்பிக்கை, புலவர் கணித்துக் கூறியபடியே ஏழாம்நாள் இவ்வரசன் இறந்து போனான். அப்போது அப்புலவர் இவன் மீது 'ஆனந்தப் பையுள்' பாடினார் (புறம்-229). இச் செய்யுளின் அடிக்குறிப்பு, 'கோச் சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இன்ன நாளிற்றுஞ்சு மென அஞ்சி, அவன் துஞ்சியவிடத்துப் பாடியது' என்று கூறுகிறது. (துஞ்சுதல்-இறந்துபோதல்). யா.சே.மா.சே. இரும்பொறை ஏறத்தாழ கி. பி. 170 முதல் 190 வரையில் அரசாண்டான் என்று கருதலாம்.

யா. சே. மா. சே. இரும்பொறையின் காலத்தில் சோழ நாட்டை யரசாண்டவன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளி வளவன், பாண்டிநாட்டை யரசாண்டவன் தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், சேர நாட்டை யரசாண்டவன் செங்குட்டுவனின் மகனான குட்டுவஞ் சேரல் (கோக்கோதை மார்பன்). இவர்கள் சேரன் செங் குட்டுவன் காலத்துக்குப் பிறகு (கி. பி. 180-க்குப் பிறகு) அரசாண்டார்கள்.