பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

460

சங்க இலக்கியத்

என்றவிடத்தும் பயிலப்படும் குளவி என்பதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் ‘காட்டு மல்லிகை’ என்று உரை கூறியுள்ளார். பரிபாடலில் (62) இதற்குத் ‘தாளிப்பூ’ என்று உரை கூறப்பட்டு உள்ளது. குறுந்தொகை (100) உரையில் உ. வே. சா. இதனை ‘மனை மல்லிகை’ என்பர். புறநானூற்று உரைகாரரும் (168) இதற்கு ‘மலை மல்லிகை’ என்று உரை கூறினார். நற்றிணை (346) உரை ஆசிரியர் இதற்கு ‘மலைப்பச்சை’ என்று உரை கண்டார். நற்றிணையுடன், நிகண்டுகளில் திவாகரமும், சூடாமணியும் இதனை ‘மலைப்பச்சை’ என்றே குறித்தன. எனினும், இது மல்லிகை வகையானது. இதன் இலைகள் பெரியனவாக இருக்குமென்பதைப் ‘பரு இலைக் குளவி’ (குறுந். 100) என்றும், இலைகள் அடர்ந்திருக்குமென்பதை ‘அடை மல்கு குளவி’ (புறநா. 90) என்றும் புலவர்கள் கூறுவார்கள். மல்லிகை இனத்தில் 15 செ.மீ. நீளமும் 6 செ. மீ அகலமும் உள்ள மிகப் பெரும் இலைகளை உடைய ஒரு கொடிதான் தாவர இயலில் பேசப்படுகிறது. குளவியின் இவ்வியல்பைக் கொண்டு, இக்கொடியின் தாவர இரட்டைப் பெயரை உறுதி செய்வதற்குக் குறுந்தொகைச் செய்யுள் (100) துணையாக உள்ளது. மேலும் இது ‘பெருந்தண் கொல்லிச் சிறு பசுங்குளவி’ (நற். 346 : 9) எனப்படுதலின், தண்ணிய மலைப் பாங்கில் வளரும் பசிய சிறு கொடி என்பதை அறியக் கூடும். ஆகவே, இதனை மலை மல்லிகை எனக் கூறுதல் பொருந்தும். இதற்குத் தாவரவியலில் ஜாஸ்மினம் கிரிபித்தியை (Jasminum griffithii, Clarke) என்றழைப்பார்.

மேலும் இக்கொடி கயம், நீரோட்டம் முதலியவற்றிற்கருகில் வளருமென்று கூறப்படுகின்றது.

“நீரிழி மருங்கின் ஆரிடத் தமன்ற
 குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி”

-அகநா. 272 : 7-8
“குளவித் தண்கயம் குழையத் தீண்டி”一நற். 232 : 2

‘வேட்டைச் செந்நாய் உண்டு எஞ்சிய பகுதி, சிறுநீர் நிலையில் விழுந்து அழுகிக் கிடக்கிறது. அந்நீர் நிலைக்கு மேலே பூத்த குளவி மலர்கள் அதனை மூடியது போல விழுந்துள்ளன’ என்றார் சிறைக்குடி ஆந்தையார்.

“வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்
 குளவி மொய்த்த அழுகற் சின்னீர்”
-குறுந். 56 : 1-2

இக்கொடி மலையில் வளரும் இற்றி மரத்தின் மேல் ஏறிப் படரும் என்று ஐங்குறுநூறு கூறும்.