பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/749

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

ஊகு–ஊகம்புல்
அரிஸ்டிடா செட்டேசியா (Aristida setacea, Retz.)

புறநானூற்றில் கூறப்படும் ‘ஊகு’ என்பது ஒரு வகையான ‘புல்’ ஆகும்.

இப்புல்லின் குச்சிகளைத் தொகுத்துத் துடைப்பமாகப் பயன்படுத்துவர்.

சங்க இலக்கியப் பெயர் : ஊகு
தாவரப் பெயர் : அரிஸ்டிடா செட்டேசியா
(Aristida setacea, Retz.)

ஊகு–ஊகம்புல் இலக்கியம்

‘ஊகு’ என்பது ஒரு வகைப் புல் ஆகும். இதனை ‘ஊகம்புல்’ என்று வழங்குவர். இப்புல்லின் தண்டு-குச்சி வெள்ளியது; நீளமானது; இப்புல் 2-3 அடி உயரம் வரை ஓங்கி வளரும்; இதனைத் தொகுத்துத் துடைப்பமாகப் பயன்படுத்துவர். அதனால் இது துடைப்பம்புல் என்றும் கூறப்படும். ஈர்க்கு போன்ற இக்குச்சித் தொகுதியைக் கொண்டு கூரை வேய்தலும் உண்டு.

வேட்டுவக் குலச் சிறுவர் இதன் குச்சியை எடுத்து அதன் முனையில், ‘உடை’ எனப்படும் மரத்தில் உண்டாகும் துளையுள்ள முள்ளைச் செருகி அம்பு போலச் செய்து கொள்வர். இதனை வில்லில் ஏற்றி எலி முதலியவற்றை எய்வர். இவ்வுண்மையை ஆலத்தூர் கிழார் பாடியுள்ளார்.

“வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர்
 சிறியிலை உடையின் சுரையுடை வால்முள்
 ஊக நுண்கோல் செறித்த அம்பின்
 வலாஅர் வல்வில் குலாவரக் கோலி
 பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்”

(குலாவர-வளைய; கருப்பை-எலி) -புறநா. 324 : 3-7