பக்கம்:சமதர்மம், அண்ணாதுரை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111


நீதீயை நிலைநாட்ட, நேர்மையை வலியுறுத்த, நாட்டிற் கேற்ற திட்டங்களை எடுத்துரைக்க, மடமையை மாய்க்க, கொடுமைகளைக் களைய, சிறுமைகளை சீரழிவுகளைப் போக்க ஆர்வம் தோன்ற வேண்டும். அந்த ஆர்வம் ஏற்படுத்தும் சிந்தனையிலே பூத்திடும் நல்ல கருத்துக்களை, அழகுறத் தொடுத்து அளிப்பதே மேடைப் பேச்சு.

மலர்மாலை மதயானை முன் வீசப்பட்டுக் காலில் மிதிபடுவது போல, நல்ல பேச்சுக்கு பொல்லாத நிலை வருவதுமுண்டு; முகர்ந்து ரசித்து கூந்தலிற் செருகி, இன்புற்று மகிழும் மாதரிடம் மலர் சென்று பெருமையும் பயனும் கண்டறிந்து பெறக்கூடியவர்களிடம் போய்ச் சேர்வதும் உண்டு. ஆனால் என்ன ஆகுமா என்ற ஏக்கத்தை முதலில் கொள்ளாது, கருத்துக் கோவையான பேச்சை நாட்டுக்கு அளிப்பது நமது கடமை என்ற எண்ணத்தை முதலிற் கொள்ளுவரே மேடைப் பேச்சில் வெற்றி பெறும் வழி. அந்த வழி அனைவர்க்கும் பொது; அனைவருக்கும் உரிமை உண்டு. முயன்றால் யாரும் வெற்றி பெறலாம்.

 

முற்றும்